2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

பங்குச்சந்தை, தங்கம் விலை மற்றும் நாணயமாற்று வீத நிலைவரங்கள்

A.P.Mathan   / 2015 ஜனவரி 04 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ச.சேகர்


கொழும்பு பங்குச்சந்தையை பொறுத்தமட்டில் 2014 என்பது மிகவும் சிறந்த ஆண்டாக பதிவாகியிருந்தது. பிரதான சுட்டிகள் உயர்ந்த பெறுமதிகளை கடந்த ஆண்டில் பதிவு செய்திருந்ததுடன், புரள்வு பெறுமதியும் உயர்வடைந்திருந்தது. வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ஈடுபாடும் சந்தையில் பெருமளவு அதிகரித்து காணப்பட்டது. கடந்த வாரத்தை பொறுத்தமட்டில் சந்தை விசேட மாற்றங்கள் ஏதும் இடம்பெறாத நிலையில், சந்தை சீரான பெறுமதிகளை பதிவு செய்திருந்தது. புதுவருடத்தின் முதல் நாள் கொடுக்கல் வாங்கல்கள் வெள்ளிக்கிழமை இடம்பெற்றிருந்த போது சுட்டிகள் நேர் பெறுமதிகளை பதிவு செய்திருந்தது. அத்துடன், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை வியாழக் கிழமை இடம்பெறவுள்ளமையால் அடுத்த வாரம் சந்தையில் பெருமளவு ஈடுபாடுகள் காணப்படாது என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. பெறுபேறுகளைப் பொறுத்து சந்தையில் குறிப்பிடத்தக்களவு மாற்றங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை நடவடிக்கைகள் நிறைவடைந்த போது அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 7,348.39 ஆகவும், S&P ஸ்ரீ லங்கா 20 சுட்டி 4110.30 ஆகவும் பதிவாகியிருந்தன. 

டிசெம்பர் 29ஆம் திகதியுடன் ஆரம்பமான கடந்த வாரத்தின் இறுதியில் மொத்த பங்கு புரள்வு பெறுமதியாக ரூ. 2,399,032,226 அமைந்திருந்தது. கடந்த வாரம் மொத்தமாக 19,136 பங்கு கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றன. இதில் உள்நாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 18,329 ஆகவும் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 807 ஆகவும் பதிவாகியிருந்தன. 

திங்கட்கிழமை
ஸ்ரீலங்கா டெலிகொம், கொமர்ஷல் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் ஆகியவற்றின் மீது விலைச் சரிவுகள் காரணமாக புரள்வு பெறுமதி 349 மில்லியன் ரூபாவை கடந்திருந்ததுடன், சுட்டிகள் மறை பெறுமதியை பதிவு செய்து நிறைவடைந்திருந்தது. உயர் தேறிய பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு டிஸ்டிலரீஸ் பங்குகளின் மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு லங்கா ஐஓசி மற்றும் பீபிள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பங்குகளின் மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு எம்ரிடி வோல்கர்ஸ் பங்குகளின் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு விற்பனையில் ஈடுபட்டிருந்தனர். புரள்வு பெறுமதியில் வெளிநாட்டு விற்பனைகள் 75.52 வீத பங்களிப்பை வழங்கியிருந்தன.   

செவ்வாய்க்கிழமை
தேசிய அபிவிருத்தி வங்கி, ஸ்ரீலங்கா ரெலிகொம் மற்றும் டயலொக் ஆக்சியாடா ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதியில் நிறைவடைந்திருந்தன. புரள்வு பெறுமதி 677 மில்லியன ரூபாவாக பதிவாகியிருந்தது. உயர் நிகர பெறுமதி வாய்ந்த மற்றும் நிறுவனசார் ஈடுபாடு ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் ஹற்றன் நஷனல் வங்கி வாக்குரிமையற்ற பங்குகளின் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு கொள்வனவில் ஈடுபட்டிருந்தனர்.

புதன்கிழமை
சுட்டிகள் நேர் பெறுமதியில் நிறைவடைந்திருந்தன. இதில் கொமர்ஷல் லீசிங் அன்ட் ஃபினான்ஸ், ஃபின்லேஸ் கொழும்பு மற்றும் கொமர்ஷல் வங்கி போன்றன பங்களிப்பை வழங்கியிருந்தன. புரள்வு பெறுமதி 628 மில்லியன் ரூபாவை கடந்திருந்தது. உயர் தேறிய பெறுமதி வாய்ந்த மற்றும் நிறுவனசார் ஈடுபாடு ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், செலான் வங்கி வாக்குரிமையற்ற பங்குகள், பீபிள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் ஆகியவற்றின் மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு பான் ஏசியன் பவர் மீது பதிவாகியிருந்ததுடன், அக்சஸ் என்ஜினியரிங் மற்றும் லங்கா ஐஓசி ஆகியவற்றின் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு கொள்வனவில் ஈடுபட்டிருந்தனர்.

வெள்ளிக்கிழமை
சுட்டிகள் நேர் பெறுமதியை பதிவு செய்திருந்தன. இதில் கொமர்ஷல் வங்கி, கார்சன்ஸ் கம்பர்பட்ச் மற்றும் ஸ்ரீலங்கா ரெலிகொம் ஆகியன முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தன. புரள்வு பெறுமதி 742 மில்லியன் ரூபாவை கடந்திருந்தது. செலான் வங்கி வாக்குரிமையற்ற பங்குகள் மற்றும் பீபிள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பங்குகளின் மீது மொத்த கைமாறல்கள் பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு என்பது அக்சஸ் என்ஜினியரிங், ரேணுகா ஹோல்டிங்ஸ் மற்றும் யூனியன் வங்கி ஆகியவற்றின் மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு பான் ஏசியன் பவர், லங்கா ஐஓசி மற்றும் சியெர்ரா கேபிள்ஸ் பங்குகளின் மீது பதிவாகியிருந்தது. இதேவேளை, வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு விற்பனையில் ஈடுபட்டிருந்தனர்.

கடந்த வார கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் எஸ்எம்பி லீசிங் (சாதாரண), அமானா டகாஃபுல், டேர்டன்ஸ், ஃபின்லேஸ் கொழும்பு மற்றும் கொமர்ஷல் டிவ. போன்றன முதல் ஐந்து சிறந்த இலாபமீட்டிய பட்டியலிடப்பட்ட கம்பனிகளாக பதிவாகியிருந்தன. 

ப்ளு டயமன்ட்ஸ் (சாதாரண), மிட் வோல்கர்ஸ், மொரிசன்ஸ்(சாதாரண), சிஐரி மற்றும் லங்கா வென்ச்சர்ஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகளவு நஷ்டமீட்டியதாக பதிவாகியிருந்தன.


தங்கம் விலை நிலைவரம்
கடந்த வாரம் 24 கெரட் தங்கத்தின் சராசரி விலை 43,400 ரூபாவாகவும், 22 கெரட் தங்கத்தின் விலை 41,200 ரூபாவாகவும் அமைந்திருந்ததாக தங்க நகை வியாபார வட்டாரங்களிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது. 

நாணய மாற்று விகிதம்
கடந்த வாரம் டொலருக்கு நிகரான ரூபாவின் சராசரி விற்பனை பெறுமதி 133.33 ஆக பதிவாகியிருந்தது. ஐக்கிய இராச்சிய பவுணுக்கு நிகரான சராசரி விற்பனை பெறுமதி 208.15 ஆக காணப்பட்டிருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X