2026 மே 04, திங்கட்கிழமை

மட்டக்களப்பு வாவியில் கூண்டுகளில் கொடுவா மீன் வளர்ப்பு

A.P.Mathan   / 2015 மே 07 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு வாவியில் கூண்டுகளில் கொடுவா மீன் வளர்ப்பு செயற்திட்டத்தின் அறிமுகத்துடன், மீன்பிடி மற்றும் வாழ்வாதார அபிவிருத்தி செயற்திட்டத்தை உணவு விவசாய தாபனம் (FAO) ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியுடன் முன்னெடுத்துள்ளது. முறையான தயார்ப்படுத்தல் செயற்பாடுகள் மற்றும் பயிற்சிகள் போன்றவற்றுடன், இத் திட்டம் 2015 மார்ச் 17 ஆம் திகதி, மீன்குஞ்சுகள் கூண்டுகளில் இருப்புச் செய்தலுடன் ஆரம்பிக்கப்பட்டது.

வாவிப் பகுதியில் அளவுக்கதிகமாக மீன்பிடித்தல் மற்றும் வளங்களின் சுரண்டல் செயற்பாடுகளால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை தணிக்கும் வகையிலும், மீன்பிடி சமூகங்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கு பங்களிப்பு வழங்கக்கூடிய புத்தாக்கமான நிலையான வினைத்திறன் வாய்ந்த பொருளாதார செயற்பாட்டு திட்டமாகவும் கூண்டுகளில் கொடுவா மீன் வளர்ப்பு முறை அமைந்துள்ளது. இந்த செயற்பாடுகள் ஐரோப்பிய ஒன்றிய உதவியுடனான மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தின் (EU-SDDP) ஊடாக வழங்கப்படும் நிதி உதவிகளின் ஓரங்கமாக அமைந்துள்ளது. இத்திட்டத்துக்கு மொத்த உதவித் தொகையாக 60 மில்லியன் யூரோக்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இத் திட்டம், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட 7 மாவட்டங்ளைச் சேர்ந்த அரை மில்லியனுக்கும் அதிகமான மக்களை உள்வாங்குவதுடன் இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி செயற்பாடுகளுக்கும் பங்களிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பின் உணவு விவசாய தாபனத்தின் பிரதிநிதி பெத் கிராஃபோர்ட் மற்றும் குழுவினர் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். இவர்களுடன், மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி. பி.எஸ்.எம். சார்ள்ஸ், மட்டக்களப்பு மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் நெடுஞ்செழியன், மண்முனை வடக்கு பிரதேசச் செயலாளர் தவராஜா, இலங்கை தேசிய நீர் உயிரினவளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் (NAQDA) நீர் உயிரினவளர்ப்பு நிபுணர் ரவிகுமார், மட்டக்களப்பு கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் ஆர்.சி. குரூஸ், மத்திய சூழல் அதிகார சபையின் சூழலியல் அதிகாரி பி.எம்.டபிள்யு. பண்டார ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

இந்த திட்டம் தொடர்பில் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ஐரோப்பிய ஒன்றிய செயற்பாடுகளுக்கான தலைமை அதிகாரி லிபுஸி சௌகுபோவா கருத்து தெரிவிக்கையில், 'இலங்கையின் பொருளாதாரத்துக்கும், இந்த சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கும் மீன்பிடித்தல் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. இத் திட்டம், இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் நீண்ட காலமாக வழங்கும் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. அத்துடன், அதிகளவு தேவைகள் உள்ள பகுதிகளை இனங்கண்டு நிதியுதவிகள் வழங்கப்படுகின்றன. மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அவசியமான சூழலை உருவாக்கக்கூடியதாக இருக்கும் என நாம் எதிர்பார்க்கிறோம்' என்றார்.

அறிமுக நிகழ்வுக்கு முன்னதாக, விரிவான தொழில்நுட்ப மற்றும் பொருளாதார பயிற்சிகள் திட்டத்தில் பங்கேற்கும். மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. 'நாவலடி வாவி மீன் வளர்ப்பு மீனவர் சங்கம்' தாபிக்கப்பட்டு, அதன் மூலம் மீனவ குழுக்கள் மற்றும் செயற்திட்டத்தின் நிலையாண்மை தொடர்பில் கண்காணிப்பு போன்றன உறுதி செய்யப்பட்டுள்ளன. வழங்கப்பட்ட பயிற்சிகளில் தினசரி நிர்வாக செயற்பாடுகள், கூண்டு அமைத்தல், பொருத்தமான மீன் இனங்களை தெரிவு செய்தல், மீன்குஞ்சுகளை கணிப்பிடுதல், உணவூட்டல், தரப்படுத்தல் மற்றும் மீன்பிடிக்கும் நுட்பங்கள் போன்றவற்றுடன் கணக்கு பதிதல் மற்றும் இதர நிதிசார் விடயங்களை பதிதல் மற்றும் மதிப்பிடல் முறைகளும் உள்ளடங்கியிருந்தன. EU-SDDP செயற்திட்டத்துக்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் மீன் குஞ்சு பொரிக்கும் நிலையத்தை நிறுவ உணவு விவசாய தாபனம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலமாக கொடுவா மீன் வளர்ப்பின் எதிர்கால விஸ்தரிப்பு செயற்பாடுகளுக்கு அவசியமான மீன் குஞ்சுகளை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். அத்துடன், இதுபோன்ற மற்றுமொரு திட்டத்தை புத்தளம் மாவட்டத்திலும் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கூண்டுகளில் மீன்களை வளர்த்தல் என்பது புத்தாக்கமான ஒரு செயற்பாடாகும், இதன் மூலமாக பெறுமதி வாய்ந்த இயற்கையான மீன் வளங்கள் பராமரிக்கப்படுவதுடன், மீனவ குடும்பங்களுக்கு தமது முதலீடுகளிலிருந்து சிறந்த வருமானத்தை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்' என உணவு மற்றும் விவசாய தாபனத்தின் பிரதிநிதி பெத் கிராஃபோர்ட் குறிப்பிட்டார். உவர் நீர் பகுதியில் மிதக்கும் கூண்டுகளில் கொடுவா மீன்கள் வளர்க்கப்படுகின்றன. விசேடமான மிதக்கும் கட்டமைப்பு பேணப்படுகிறது. பத்து கொடுவா கூண்டுகளின் மூலமாக 10 மெட்ரிக் தொன் உயர் தரம் வாய்ந்த கொடுவா மீனை உற்பத்தி செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலமாக சராசரியாக மீனவ குடும்பமொன்றுக்கு 500,000 ரூபா வரையான வருடாந்த வருமானத்தை ஈட்டிக் கொள்ள முடியும். பெண்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளடங்கலாக. நாவலடி பகுதியைச் சேர்ந்த மீனவ குடும்பங்கள் சங்கம் ஒன்றை அமைப்பதற்கு ஊக்குவிக்கப்பட்டிருந்தனர், இவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டதுடன் இலங்கை தேசிய நீர் உயிரினவளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தொடர்ச்சியான மேற்பார்வைக்கும் உட்படுத்தப்படும்.

'எமது பிரதான வருமான மூலமாக வாவிகளில் மீன்பிடித்தல் அமைந்துள்ளது. எமது கிராமத்தில் கொடுவா மீன் வளர்ப்பு முறையை அறிமுகம் செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் நிதி உதவிகளை வழங்க முன்வந்தமைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இதன் மூலம் உறுதி செய்யப்பட்ட வருமான மூலத்தை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்' என இந்த திட்டத்தின் மூலம் அனுகூலம் பெறும் மட்டக்களப்பு, நாவலடி பகுதியைச் சேர்ந்த திருமதி. நந்தினி மாணிக்கம் தெரிவித்தார்.

EU-SDDP செயற்திட்டத்துக்கமைய, பின்தங்கிய சமூகங்கள், பெண்களை தலைமையாக கொண்டியங்கும் குடும்பங்கள், அங்கவீனமுற்றவர்கள் மற்றும் பின்தங்கிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களை இலக்காக கொண்டு வருமானம் பெற்றுக் கொடுக்கும் செயற்திட்டங்களை உணவு விவசாய தாபனம் ஒருங்கிணைத்து முன்னெடுத்து வருகிறது. மேலும், மேற்படி பிரிவுகளைச் சேர்ந்தவர்களின் வாழ்வாதாரத்தை விஸ்தரிக்கும் வகையில் சாதனங்கள், புதிய தொழில்நுட்பம், ஆளுமை விருத்தி மற்றும் உற்பத்திக்கு தேவையான சொத்துக்களை வழங்கும் நடவடிக்கைகளை உணவு விவசாய தாபனம் முன்னெடுத்து வருகிறது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .