Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2015 ஒக்டோபர் 12 , மு.ப. 09:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.றொசேரியன் லெம்பேட்
நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள், திங்கட்கிழமை (12) முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில், அவர்களுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
'கொழும்பு, மெகஸின், சீ.ஆர்.பி அநுராதபுரம், தும்பறை, நீர்கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய சிறைகளில் சுமார் 20 வருடங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 250இற்கும் அதிகமான அரசியல் கைதிகள், நேற்று முதல், சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தொடர்ச்சியாக பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வந்தது. குறிப்பாக மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில், அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அரசாங்கத்துக்கு பல்வேறு அழுத்தங்களைக் கொடுத்த நிலையில், ஆர்ப்பாட்டங்கள் மூலமாகவும் அவர்களின் விடுதலைக்காக குரல் கொடுத்தோம்.
குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கில் சமூக அமைப்புக்கள், அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் மேற்கொண்ட சகல போராட்டங்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையான ஆதரவை வழங்கியதோடு த.தே.கூ.வின் நாடாளுமன்ற உறப்பினர்களும் கலந்துகொண்டு அரசியல் கைதிகளின் விடுதலைக்காக குரல் கொடுத்தோம். ஆனால், மஹிந்த அரசாங்கம் மௌனம் காத்தது.
இந்நிலையில், இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. நல்லாட்சி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
காணாமல் போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகளின் நிலை குறித்து, மக்கள் தொடர்ச்சியாக தற்போதைய ஜனாதிபதியிடம் முன் வைத்துள்ளனர். ஆனால், எவ்வித பலனும் இல்லை. குறிப்பாக தற்போது சிறை வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் குடும்பங்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
அரசியல் கைதிகளின் பிள்ளைகள் பாரிய மன அழுத்தத்தில் உள்ளதோடு, அவர்களின் குடும்பம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
அவர்களின் விடுதலைக்காக மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் கைவிடப்பட்டுள்ளன.
இதனால் பொறுமை இழந்த அரசியல் கைதிகள், சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இவர்களின் இப்போராட்டத்துக்கு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு முழு ஆதரவை வழங்குகின்றது.
வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி அரசாங்கத்துக்கு மீண்டும் அழுத்தத்தைக் கொடுக்கவுள்ளோம்.
சிறைகளில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு இனியும் தாமதிக்காது ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
1 hours ago