2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

சிறுமி துஷ்பிரயோகம்: பூசகருக்கு கடூழிய சிறை

Editorial   / 2024 ஜனவரி 18 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தினார் என குற்றஞ்சாட்டப்பட்ட  பூசகரை  எட்டு வருடங்களுக்கு பின்னர் குற்றவாளியாக இனங்கண்ட கிளிநொச்சி மேல் நீதிமன்றம், குற்றவாளிக்கு 12 ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது

 கிளிநொச்சி பளைப்   பகுதியில கடந்த 2016  ஆம் ஆண்டு ஜூலை  முதலாம் திகதி அல்லது அதற்கு அண்மித்த நாளொன்றில்  தனக்கு உறவு முறையான பதினாறு வயதுக்கும் குறைந்த சிறுமி ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தினார் என்றக் குற்றஞ்சாட்டில் பூசகர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.  

சந்தேநபரான பூசகருக்கு எதிராக கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணைகளின் பின்னர்  சட்டமா  அதிபர் திணைக்களத்தினால்  கிளிநொச்சி மேல் நீதிமன்றில வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் தீர்ப்பு,  கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி ஏ. எம் .ஏ சகாப்தீனால் வியாழக்கிழமை (18) வழங்கப்பட்டது.

  எதிரியின் சார்பாக சட்டத்தரணி பி. அருச்சுனா,  சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில்   அரச  சட்டவாதி என். என். அர்ஜுனகுமார் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

இவ்வழக்கின் எதிரி, சமூகத்துக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டியவர். தனது மனைவியின் பாதுகாப்புக்காக சிறுமியின் பெற்றோரின் சம்மதத்துடன் குறித்த சிறுமியை தனது வீட்டில் வைத்திருந்துள்ளனர். இதன்போதே பாலியல் துன்புறுத்தலுக்கு  உள்ளாக்கியிருக்கின்றார்.

வட மாகாணத்திலே பதினாறு வயதிற்கு குறைவான சிறுவர்கள்  பாலியல் ரீதியில் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்பட்டாலும் ஒரு சில சம்பவங்களுக்கு மாத்திரமே பொலிஸாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு இவ்வாறு மேல் நீதிமன்றம் வரைக்கும் கொண்டுவரப்படுகின்றது. ஆகையால், மேற்படி விடயங்களை கவனத்தில் கொண்டு குற்றவாளிக்கு தகுந்த தீர்ப்பளிக்குமாறு அரச  சட்டவாதி என். என். அர்ஜுனகுமார் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.

மேற்படி விடயங்களை கவனத்தில் கொண்ட   நீதிபதி, குற்றவாளிக்கு 12 ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளதுடன் பத்தாயிரம் ரூபாய் தண்டப்பணமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இரண்டு இலட்சம் ரூபாய் நட்டஈடும் செலுத்துமாறும் தீர்ப்பளித்தார்.

யது பாஸ்கரன்

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X