2024 ஜூலை 27, சனிக்கிழமை

ரஷ்ய இராணுவத்தை பழிவாங்க 300 கி.மீ. நடந்து சென்ற உயிர் நண்பர்

Freelancer   / 2024 மே 30 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உக்ரைன் இராணுவத்தில் பணியாற்றிய நெருங்கிய நண்பர் ரஷ்யப் படைகளால் கொல்லப்பட்டதை அடுத்து, அதற்குப் பழிவாங்கும் நோக்கில் பிரிட்டிஷ்காரர் ஒருவர், உக்ரைனுக்கு 300 கிலோ மீற்றர் நடந்து சென்றிருப்பது இணையச் செய்திகளில் வைரலாகி வருகிறது.

மொன்செஸ்டர் பகுதியைச் சேர்ந்தவர் மார்கஸ் ஸ்மித் (32). இவர், ஸ்பெயின் நாட்டில் தங்கியிருந்து அந்த நாட்டு மொழியைக் கற்று வந்திருக்கிறார். இந்த நிலையில், உக்ரைன் இராணுவப் படையில் பணியாற்றி வந்த அவரது நெருங்கிய நண்பர் ஒருவர், ரஷ்யாவுக்கு எதிரான போரில் ட்ரோன் தாக்குதலில் இறந்துபோனார் என தகவல் கிடைத்துள்ளது.

இதில் பெரும் அதிர்ச்சியடைந்த ஸ்மித், தன்னைத் தேற்றிக்கொண்டு தன் நண்பரை கொன்றவர்களை பழிவாங்குவதற்காக உக்ரைன் படையில் சேருவதற்காகப் பயணப்பட்டிருக்கிறார். இதற்காக, அவர் 300 கி.மீற்றர் தூரத்தை நடந்தே சென்றிருப்பதுதான் பேசுபொருளாகி வருகிறது.

பார்சிலோனாவில் இருந்து புடாபெஸ்ட்டுக்கு விமானத்தில் புறப்பட்ட ஸ்மித், அவரிடம் இருந்த பணம் மொத்தம் செலவானதை அடுத்து, 8 நாட்கள், 300 கிலோ மீற்றர் தூரம் கொண்ட உக்ரைன் எல்லைக்கு நடந்தே சென்றுள்ளார்.

பின்னர், உக்ரைன் எல்லைப்படை வீரர்களின் உதவியுடன் உக்ரைனுக்குள் சென்றுள்ளார். தற்போது மேற்கு உக்ரைனில் உள்ள உஸ்ஹோரோட் என்ற நகரத்தில் இருக்கும் அவர், அங்கு இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதனால் அவர் விரைவில் ரஷ்யப் படைகளுக்கு எதிராக போர் புரிவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து ஸ்மித் கூறுகையில், ”உக்ரைனில் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பன் ஒருவன் இருந்தான். அவன் தன் குடும்பத்தைப் பற்றி என்னிடம் கூறுவது வழக்கம். அவனின் தாயார் எனக்கு போன் செய்து ட்ரோன் தாக்குதல் பற்றி கூறினார், அது என்னை மிகவும் காயப்படுத்தியது. என்னிடம் உள்ள திறமைகள் இந்தப் போரில் பயனுள்ளதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். நான் காலவரையின்றி உக்ரைனில் இராணுவத்தில் பணியாற்ற விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மார்கஸ் ஸ்மித், தன்னுடைய 17ஆவது வயதில் இங்கிலாந்தின் உறைவிடப் பள்ளியில் தங்கிப் படித்தபோது இராணுவத்தின் சில பயிற்சிகளைப் பெற்றிருப்பதாகத் தெரிவித்துள்ளார். அது, தற்போது பயன்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில், பிரிட்டிஷார் உக்ரைனுக்கு புறப்பட்டுச் சென்று, உரிய அனுமதி இல்லாமல் போரில் கலந்துகொண்டு நாடு திரும்பினால், அவர்கள் தண்டிக்கப்படுவார் என்று அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .