2026 ஏப்ரல் 02, வியாழக்கிழமை

நல்ல நேரத்திற்காகக் காத்திருந்த விஜய்

Janu   / 2026 ஏப்ரல் 02 , பி.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வியாழக்கிழமை (02) திருச்சி கிழக்குத் தொகுதியில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார். இதற்காக அவர் சென்னையிலுள்ள தனது இல்லத்திலிருந்து காலை புறப்பட்டு, தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார்.

திருச்சி கிழக்குத் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்காக, திருச்சி விமான நிலையத்திலிருந்து பரப்புரை வாகனத்தில் 'ரோட் ஷோ' (Road Show) ஊடாக வந்த விஜய், முற்பகல் 11.20 மணியளவில் பாலக்கரை மாநகராட்சி அலுவலகத்தை வந்தடைந்தார். எனினும், அவர் உடனடியாக உள்ளே சென்று வேட்புமனுத் தாக்கல் செய்யாமல், சிறிது நேரம் தனது வாகனத்திலேயே (Caravan) காத்திருந்தார். நண்பகல் 12 மணியளவில் 'நல்ல நேரம்' என்பதால், அதுவரை காத்திருந்து அதன் பின்னரே அவர் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்ததாகக் கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய முதல் நாளிலேயே அவர் பெரம்பூர் தொகுதியில் தனது மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அன்றைய தினமே பெரம்பூர் மற்றும் கொளத்தூர் ஆகிய இரு தொகுதிகளிலும் விஜய் தனது தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து வில்லிவாக்கம் மற்றும் அண்ணா நகர் தொகுதிகளில் அவர் பிரசாரம் செய்யத் திட்டமிட்டிருந்த போதிலும், பாதுகாப்பு காரணங்களுக்காக அந்தப் பிரசாரங்கள் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. நேற்று மற்றும் அதற்கு முந்தைய தினங்கள் விடுமுறை என்பதால் வேட்புமனுத் தாக்கல் செய்யப்படாத நிலையில், இன்று மீண்டும் மனுத் தாக்கல் செய்ய முடியும் என்பதால் விஜய் இன்று காலை திருச்சியில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .