2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

உப்பு நீரில் விளக்கு எரியும் அற்புதம்

Freelancer   / 2022 ஜூன் 07 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன், செ.கீதாஞ்சன்

உப்பு நீரில் விளக்கெரியும் அற்புதம் நிறைந்த வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கான  தீர்த்தம் எடுத்தல் உற்சவம்  நேற்று  மாலை (06) முல்லைத்தீவு தீத்தக்கரை பகுதியில்  சிறப்பாக இடம்பெற்றது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கடந்த 30.05.2022 திங்களன்று பாக்குத்தெண்டலுடன் ஆரம்பமாகியிருந்தது.

அதனைத் தொடர்ந்து நேற்று (06) உப்பு நீரில் விளக்கெரியும் அற்புதம் நிறைந்த வற்றாப்பளை கண்ணகை  தாய்க்கான  விளக்கு எரிப்பதற்கான உப்பு நீரிணை  கடலிலே பெற்றுக் கொள்கின்ற அரிய நிகழ்வு இடம்பெற்று இருந்தது.

அந்த வகையில் நேற்று (06) மாலை முள்ளியவளை காட்டு  விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து தீர்த்தக்குடம் பாரம்பரிய முறைப்படி, பறை வாத்தியம்  முழங்க அடியவர்கள் புடைசூழ பாரம்பரிய  வீதிகள்  வழியாகச் சென்று  தீர்த்தக்கரையில் அமைந்திருக்கின்ற முல்லைத்தீவு பெருங்கடலில் தீர்த்தம் எடுக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து தீர்த்தக்குடம் சென்ற வீதி வழியாகவே மீண்டும் முள்ளியவளை காட்டு  விநாயகர் ஆலயத்தை இரவு 11 மணியளவில் வந்தடைந்தது.

வீதிகள் எங்கும் அடியவர்கள் கும்பங்கள் வைத்து மடைகள் பரவி  சிதறு தேங்காய்கள் உடைத்து வழிபாடுகளை மேற்கொண்டனர்.

தீர்த்தக்குடம் முள்ளியவளை காட்டு  விநாயகர் ஆலயத்தை வந்தடைந்ததன் பின்னர் உரிய  முறைப்படி இன்று அதிகாலை வேளையிலே முள்ளியவளை காட்டு  விநாயகர் ஆலயத்தில் உள்ள அம்மனுக்கு  மடப்பண்டம் எடுத்துவரப்பட்டு கச்சை நேர்ந்து மடைபரவி உப்புநீரிலே விளக்கேற்றி தூழி பிடித்து விசேட பூசை இடம்பெற்று ஏடு படிக்கும் நிகழ்வும் ஆப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஆப்பிக்கப்பட்ட  காட்டு விநாயகர் ஆலய உற்சவம்  தொடர்ச்சியாக இடம்பெற்று 12.06.2022 அன்று முள்ளியவளை காட்டு  விநாயகர் ஆலய பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்று மறுநாள் எதிர்வரும் திங்கட்கிழமை 13.6. 2002 அன்று அதிகாலையில் காட்டு  விநாயகர் ஆலயத்தில் இருந்து  மடப்பண்டம்  எடுத்து வரப்பட்டு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .