2026 மார்ச் 19, வியாழக்கிழமை

நூலிழையில் காப்பாற்றிய சீதை அம்மன் (வீடியோ)

Lenin Raj   / 2026 மார்ச் 19 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

கஜரூபன் திவ்யா
 

நுவரெலியா - சீதா எளிய ஸ்ரீ சீதை அம்மன் ஆலயத்திற்கு முன்பாக உள்ள பாதசாரி கடவையில், அதிவேகமாக வந்த மோட்டார் வாகனமொன்று முச்சக்கர வண்டியுடன் மோதவிருந்த நிலையில், அதிலிருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

புதன்கிழமை (18) அன்று மாலை 5:02 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆலயத்திற்கு முன்பாக உள்ள பாதசாரி கடவையை முச்சக்கர வண்டியொன்று கடக்க முற்பட்ட போது, வலது திசையிலிருந்து அதிவேகமாக வந்த மோட்டார் வாகனமொன்று மோதுவது போன்று மிக நெருக்கமாகச் சென்றது. முச்சக்கர வண்டி சாரதியின் சமயோசித செயலால், அதிலிருந்த சாரதி உட்பட மூவரும் நூலிழையில் உயிர் தப்பினர். இச்சம்பவம் முச்சக்கர வண்டியில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமெராவில்   தெளிவாகப் பதிவாகியுள்ளது.

சீதை அம்மன் ஆலயத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இவ்வாறான புனிதத் தலங்களுக்கு முன்பாக வாகனங்களை அதிவேகமாகவும், பாதுகாப்பற்ற முறையிலும் செலுத்துவது பயணிகளின் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக இப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் குறித்து நுவரெலியா பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி குமார யாப்பா அவர்களிடம் வினவியபோது, "முச்சக்கர வண்டி கமெராவில் மோட்டார் வாகனத்தின் பதிவு இலக்கம் தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், சீதை அம்மன் ஆலயத்தில் உள்ள பாதுகாப்பு கமெராக்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள ஏனைய கமெராக்களை ஆய்வு செய்து வருகிறோம். சம்பந்தப்பட்ட வாகனமும் சாரதியும் விரைவில் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X