Lenin Raj / 2026 மே 12 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

சரவணன்
முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 17-ம் ஆண்டு நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று (மே 12) காலை காந்தி பூங்காவில் 'முள்ளிவாய்க்கால் கஞ்சி' வழங்கும் நிகழ்வு உணர்வுபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
2009-ம் ஆண்டு இறுதிப் போரின் போது, எவ்வித உணவுப் பொருட்களும் இன்றி பட்டினியால் வாடிய தமிழ் மக்களுக்கு, உயிர் காக்கும் உணவாக அமைந்த அந்த முள்ளிவாய்க்கால் கஞ்சியை ஒரு வரலாற்று அடையாளமாகவும், குறியீடாகவும் பகிர்ந்து கொள்ளும் நோக்கில் இந்த நிகழ்வு ஆண்டுதோறும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
நிகழ்வின் ஆரம்பத்தில், போரில் உயிரிழந்த மக்களுக்காக ஊடகவியலாளர் நினைவுத் தூபியில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் வழிப்போக்கர்களுக்கு கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது.
இதில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்.சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள். அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள். ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
இந்த நிகழ்வின் போது கருத்துத் தெரிவித்த உறவுகள், "எமது மக்களின் வலிகளையும், அவர்கள் அனுபவித்த பசி, பட்டினியையும் இளைய தலைமுறையினர் மறந்துவிடக் கூடாது. இந்த நினைவேந்தல் என்பது வெறும் சடங்கு மட்டுமல்ல; இது நீதிக்கான எமது தொடர்ச்சியான போராட்டத்தின் ஒரு வடிவம். முள்ளிவாய்க்கால் மண்ணில் சிந்தப்பட்ட இரத்தமும், அனுபவித்த துயரமும் சர்வதேச சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டு எமக்கு நீதி கிடைக்க வேண்டும்," என வலியுறுத்தினர்.
காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை வெளிப்படுத்தக் கோரியும், சர்வதேச நீதியை வேண்டியும் கடந்த பல வருடங்களாகத் தொடர்ந்து போராடி வரும் தாய்மார்கள், இம்முறையும் இந்த நினைவேந்தல் வாரத்தை முன்னெடுத்துள்ளனர்.
மட்டக்களப்பின் பல்வேறு இடங்களிலும் எதிர்வரும் மே 18-ம் திகதி வரை இந்த கஞ்சி வழங்கும் நிகழ்வுகள் மற்றும் நினைவேந்தல்கள் தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago