2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கோஷங்களின் மூலமாக மாத்திரம் தேர்தலில் வெற்றியடைய முடியாது: ரணில்

Suganthini Ratnam   / 2012 ஜூலை 30 , மு.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சி.அன்சார்)


கோஷங்களின் மூலமாக மட்டும் தேர்தலில் வெற்றி பெறமுடியாது எனவும் நாட்டின் உண்மையான நிலைமைகளை மக்களுக்கு தெளிவுபடுத்தி அதன் மூலமாக நாட்டை சீரழிவுகளிலிருந்து காப்பாற்றமுடியும் என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான  அறிமுகக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இததில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'இன்று பாடசாலைக் கல்வி சீர்குலைந்துள்ளது. பல்கலைக்கழங்களின் செயற்பாடுகள் முடங்கியுள்ளன.  உயர்கல்வி என்னும் பாலம் இஸட் புள்ளி குண்டின் மூலம் தகர்க்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு உதவி செய்வதற்கு இந்த அரசாங்கத்திடம் எத்திட்டமும் இல்லை. அவர்களின் நெல்லினை கொள்வனவு செய்வதற்கு குறைந்தளவு நிதியை ஒதுக்குகின்றது. ஆனால், தேசத்திற்கு மகுடம் திட்டத்திற்கு பல கோடி ரூபாய்களை ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த அரசாங்கத்தில் ஊழல், மோசடி போன்றவை தலைவிரித்தாடுகின்றது. மக்கள் தங்கள் வாழ்க்கையினை கொண்டுசெல்ல முடியாதளவில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். மக்களின் கவனத்தினை திசை திருப்புவதற்காகவே மாகாணசபைகளுக்கான தேர்தல்களை அரசாங்கம் நடத்தவுள்ளது.

2004ஆம் ஆண்டு ரோக்கியோ மாநாட்டின் மூலம் பெறப்பட்ட நிதியில் 50 வீதமானவை செலவிடப்பட்டுள்ளது. ஏனையவை அரசியல்வாதிகளின் பைகளில் சென்றுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸ், முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளை மறந்து செயற்படுகின்றது. பள்ளிவாசல்கள் உடைப்பு மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான அநியாயங்களை கண்டும் அது  மௌனமாகவுள்ளது.

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸை அரசாங்கமே தனித்துப் போட்டியிடும்படி கேட்டுக்கொண்டுள்ளது. மாறாக முஸ்லிம் காங்கிரஸ் தனித்துவமாக இல்லை. தேர்தல் முடிந்தவுடன் அது அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளும். கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அரசாங்கத்தில் அங்கம்வகிக்கும் முஸ்லிம் காங்கிரஸுக்கும் அதாவுல்லாவுக்கும் வாக்களித்தால் கடைசியில் மஹிந்த அரசாங்கத்துக்கே போய்ச்சேரும். இதன் மூலம் இக்கட்சித் தலைவர்களுக்கு தரகுப்பணம் கிடைக்கும். ஆனால் முஸ்லிம் சமூகத்திற்கு ஒன்றும் கிடைக்காது.

அல்குர்ஆனின் போதனைகளையும் நபி(ஸல்) அவர்களின் வழிமுறைகளையும் பின்பற்றுகின்ற கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் இன்று இக்கட்சிக்குள் சுயநலவாதிகளும் சந்தர்ப்பவாதிகளும் மற்றும் நயவஞ்சகர்களும்  காணப்படும் கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் உள்ளது.  ஆனால் நபி(ஸல்) அவர்களின் போதனைகளை மதித்து நடப்பவர்களே எமது கட்சிக்குத் தேவை. ஐக்கிய தேசியக் கட்சி ஒருபோதும் இனவாதக் கட்சி அல்ல.  இன, மத, மொழி பேதம் இன்றி செயற்படும் கட்சியாகும். எனவே எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்திற்கு  வாக்களிக்க வேண்டும்'  என்றார்.

இக்கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க,  நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க,  அனோமா கமகே, ஹரின் பெனார்ந்து உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0

  • rima Monday, 30 July 2012 02:45 PM

    அல்குர்ஆனின் போதனைகளையும் நபி(ஸல்) அவர்களின் வழிமுறைகளையும் சரியாக சொன்னீர்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .