2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

நாட்டை ஆள தகுதி அற்றவர் ரணில்

Princiya Dixci   / 2022 ஜூலை 26 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான், நூறுல் ஹுதா உமர்

நாட்டை ஆள ரணில் விக்கிரமசிங்க தகுதி அற்றவர், அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் தெரிவித்தார்.

சங்கத்தின் கல்முனை தலைமையகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கருத்துரைக்கையில், “அமைதி வழியில் கலைந்து செல்வதற்கு தயாராக இருந்த போராட்டக்காரர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலை எல்லோருடனும் சேர்ந்து நாமும் வன்மையாக கண்டிக்கின்றோம்.

“முப்படையினருக்கு திட்டமிட்ட வகையில் கூடுதல் அதிகாரம், அனுமதி ஆகியவற்றை வழங்கி, போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறையை பிரயோகித்த ரணில் விக்கிரமசிங்க உடனடியாக ஜனாதிபதி பதவியைத் துறக்க வேண்டும்.

“நிராயுதபாணிகளான போராட்டக்காரர்கள் மாத்திரம் அன்றி உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகவியலாளர்களும் படையினரின் பேயாட்டத்துக்கு உட்பட்டு பாரதூரமாக பாதிக்கப்பட நேர்ந்தது.

“நாட்டின் தலைவர் என்கிற வகையிலும், பாதுகாப்பு அமைச்சர் என்கிற வகையிலும் இம்மிலேச்சத்தனமான தாக்குதலுக்கான தார்மீக பொறுப்பை ரணில் விக்கிரமசிங்க ஏற்று, பதவி விலக தவறினால் அவருக்கு எதிரான போராட்டம் தொடரும்.

“கோட்டாவுக்கு ஏற்பட்ட நிர்க்கதிதான் ரணிலுக்கும் நேரும் என்பது திண்ணம்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .