2025 மே 15, வியாழக்கிழமை

மீனவர்களால் அமைக்கப்பட்ட வீதி அகற்றப்பட்டது

Editorial   / 2020 ஜூன் 05 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.ஏ.றமீஸ்

அட்டாளைச்சேனை, கோணாவத்தை பகுதியில், மீனவர்களால் அமைக்கப்பட்டு வந்த வீதியொன்று, சட்டவிரோதமானதென கரையோரம் பேணல், கரையோர மூலவள முகாமைத்துவத் திணைக்களத்தின் அதிகாரிகளது அறிவுறுத்தல்களுக்கமைவாக, இன்று (05) அகற்றப்பட்டுள்ளது.

கோணவத்தை கடற்கரைப் பகுதியில், மே மாதம் 30ஆம் திகதியன்று மீனவர்களுக்கான வீதியொன்று, கிறவல் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

சுமார் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியில் அமைக்கப்பட்ட இவ்வீதியை அமைக்கும் வகையில், தனவந்தர்கள், மீனவர்கள், விளையாட்டுக் கழகத்தினர் உள்ளிட்டவர்களது உதவி பெறப்பட்டிருந்ததாக, அப்பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.

ஒலுவில் துறைமுகத்தில் தரித்து வைத்து தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அப்பகுதி மீனவர்கள், துறைமுகத்தில் மணல் நிரம்பிய காரணத்தால் தமது தொழில் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியாமல் போயுள்ளது.

இதனைத் தொடர்ந்து சுமார் 50க்கும் மேற்பட்ட படகுகளும் சிறிய கரைவலை தொழிலுக்கான வள்ளங்களும், சில மாதங்களாக கோணாவத்தை கடற்கரைப் பிரதேசத்தில் தரித்து வைக்கப்பட்டு, தமது தொழில் செயற்பாட்டை மீனவர்கள் முன்னெடுத்து வந்துள்ளனர்.

இம்மீனவர்கள், தமது படகுகளுக்கான எரிபொருள், மீன்பிடி நடவடிக்கைகளுக்கு வேண்டிய பொருள்களை கொண்டு செல்வதற்கும், கடலில் பிடிக்கப்படுகின்ற மீன்களைத் தரைக்கு கொண்டு செல்லவுமென, மணற்பாங்கான இப்பகுதியில் தமது செயற்பாடுகளை மேற்கொள்ள மீனவர்கள் பல்வேறான சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்த சிரமங்களை போக்கும் வகையில், வள்ளங்கள் தரித்து வைக்கப்படும் பகுதி வரை அமைக்கப்பட்ட மேற்படி வீதி, கரையோரம் பேணல், பாதுகாப்பு திணைக்களத்தினரின் உரிய அனுமதி பெறப்படாமையால் இன்று அகற்றப்பட்டது.

இந்த வீதியை மீளவும் அமைக்கும் வகையில், உரிய தரப்பிரனரின் அனுமதியைப் பெறவுள்ளதாக, அப்பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .