2026 பெப்ரவரி 10, செவ்வாய்க்கிழமை

கடனை செலுத்தத் தவறியதால் அடித்துக் கொலை

Freelancer   / 2024 ஜூலை 02 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கு வங்கத்தில் பொது இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்து வருவது, கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது.

திருமணத்தை மீறிய உறவில் இருந்த ஜோடி ஒன்று பொதுமக்கள் முன்னிலையில் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் நடந்த மறுதினமே, வாங்கிய கடனை திருப்பித் தராத நபர் ஒருவர் கட்டி வைத்து அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஹூக்ளி மாவட்டத்தின் தாரகேஸ்வரை அடுத்த நைடா மல்பஹார்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிஸ்வஜித் மன்னா என்பவர், அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் 50,000 ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

வாங்கிய கடனை அவர் திருப்பித் தராத நிலையில், இரு தினங்களுக்கு முன் அவர் மாயமாகியுள்ளார்.

இந்நிலையில், கடனை கொடுத்தவர், மன்னாவை கடத்திச் சென்று தன் நண்பர் வீட்டில் அடைத்து வைத்ததுடன், மயக்கமடையும் வரை இருவரும் சேர்ந்து அவரை கொடூரமாக தாக்கியுள்ளது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சூழ்நிலையில், பாதிக்கப்பட்டவர் மருத்துவமனையில் நேற்று பலியானார். இதுதொடர்பில், கொலை வழக்குப் பதிவு செய்த பொலிஸார், விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

கடந்த 28ஆம் திகதி தொடங்கி, நான்கு நாட்களாக தொடர்ந்து இது போன்ற வன்முறை சம்பவங்கள் மேற்கு வங்கத்தில் அரங்கேறி வருவது, அந்த மாநில மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இதற்கிடையே, உத்தர் தினாஜ்பூர் மாவட்டத்தின் சோப்ரா பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பெண் உட்பட இருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, முதல்வர் மம்தா பானர்ஜியிடம் மாநில கவர்னர் சி.வி.ஆனந்த போஸ் உடனடியாக அறிக்கை கேட்டுள்ளதாக கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தலிபான் ஆட்சி நடக்கும் ஆப்கானிஸ்தான் நாட்டில், குற்றங்களில் ஈடுபடுவோருக்கு பொது இடங்களில் தண்டனை கொடுக்கப்படும் சம்பவங்கள் நடப்பது வழக்கம்.

இந்நிலையில், தற்போது மேற்கு வங்கத்திலும் அது போன்ற சம்பவங்கள் நடப்பது, மனித உரிமை ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.S


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .