2024 மே 04, சனிக்கிழமை

விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு

Mithuna   / 2024 பெப்ரவரி 22 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பஞ்சாப் - ஹரியாணா எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் ‘டெல்லி சலோ’ பேரணியை புதன்கிழமை (21) மீண்டும் தொடங்கியபோது அவர்களைத் தடுத்து நிறுத்த ஹரியாணா பொலிஸார் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளின்படி 23 வகையான பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்க வேண்டும். இதை உறுதி செய்து சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13-ம் தேதி முதல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந் நிலையில் ஷம்பு எல்லையில் விவசாயிகளின் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நில அகழ்வு இயந்திரங்கள் மற்றும் புல்டோசர்கள் உரிமையாளர்களுக்கு ஹரியாணா பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பொக்லைன்ஸ் மற்றும் ஜேசிபி உரிமையாளர்கள் மற்றும் அவற்றை இயக்கும் தொழிலாளர்களே நீங்கள் போராட்டக்காரர்களுக்கு உங்களின் உபகரணங்களை உபயோகித்து உதவி செய்ய வேண்டாம்.

உங்களுடைய இயந்திரங்களை போராட்டக் களத்தில் இருந்து வெளியே எடுத்துச் செல்லுங்கள். அவைகள் பாதுகாப்பு படையினருக்கு எதிராகவும், அவர்களைக் காயப்படுத்தவும் பயன்படுத்தப்படலாம். அது ஜாமீனில் வெளியே வர முடியாத குற்றமாகும். மேலும் நீங்களும் கிரிமினல் குற்றத்துக்கு ஆளாகலாம்” என்று தெரிவித்துள்ளது.

இதனிடையே விவசாய சங்கத் தலைவர் சர்வான் சிங் பாந்தர் கூறுகையில், “இளைஞர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் யாரும் இப்போது முன்னேற வேண்டாம். விவசாயத் தலைவர்கள் மட்டும் டெல்லி நோக்கி முன்னேறுகிறோம்.

நாங்கள் யாரையும் தாக்கப் போவதில்லை. நாங்கள் வெறுங்கையுடன் செல்கிறோம். நாங்கள் டெல்லியில் மத்திய அரசை முடிவு எடுக்கச் சொல்லி வலியுறுத்துவோம். அரசாங்கம் எங்களை கொலைகூட செய்யட்டும். ஆனால் எங்களை அடக்குமுறைக்கு உள்ளாக்க வேண்டாம். குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டபூர்வ அங்கீகாரத்தை அறிவித்து பிரதமர் இந்தப் போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் எங்களின் வேண்டுகோள். விவசாயிகளை ஒடுக்கும் அரசாங்கத்தை தேசம் ஒருபோதும் மன்னிக்காது" என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .