Editorial / 2026 பெப்ரவரி 09 , பி.ப. 01:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜப்பான் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் அந்நாட்டு பிரதமர் சனே டகாய்ச்சி தலைமையிலான லிபரல் ஜனநாயகக் கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் பிடித்துள்ளது. இந்நிலையில், சனே டகாய்ச்சிக்கு உலக நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஜப்பான் பாராளுமன்ற கீழவை பிரதிநிதிகள் சபையில் உள்ள 465 இடங்களுக்கான இந்த தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 316 இடங்களில் பிரதமர் சனே டகாய்ச்சி தலைமையிலான லிபரல் ஜனநாயகக் கட்சி வென்றது. இதை ஜப்பான் நாட்டின் செய்தி நிறுவனமான என்ஹெச்கே உறுதி செய்துள்ளது. ஆட்சி அமைக்க 233 இடங்கள் தேவை என்ற சூழலில் எல்டிபி அபார வெற்றி பெற்றுள்ளது.
தற்போது எல்டிபி மற்றும் அதன் கூட்டணி கட்சியான ஜப்பான் இன்னோவேஷன் கட்சியும் நாடாளுமன்ற கீழவையில் 3-ல் 2 பங்குக்கும் கூடுதலான இடங்களை பெற்றுள்ளது. இதனால் பாராளுமன்ற மேலவையிலும் பிரதமர் சனே டகாய்ச்சி ஆதிக்கம் செலுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜப்பான் நாடாளுமன்ற கீழவைக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடப்பது வழக்கம். இருப்பினும் ஆட்சியில் உள்ள கட்சியினர் தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி தேர்தலை முன்கூட்டியே அறிவித்து வெற்றி பெறுவர். அந்தவகையில் கடந்த அக்டோபர் மாதம் ஜப்பான் நாட்டின் முதல் பெண் பிரதமராக பிரதமர் சனே டகாய்ச்சி பொறுப்பேற்றார்.
இந்நிலையில், அண்மையில் பாராளுமன்றத்தை கலைத்து, தேர்தல் அறிவித்தார். இந்த சூழலில் தேர்தலில் அவரது கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, கடந்த 2024 தேர்தலில் எல்டிபி கட்சி பெரும்பான்மை பெறவில்லை. இருப்பினும் கூட்டணி ஆதரவுடன் அக்கட்சியின் சார்பில் பிரதமராக ஷிகெரு இஷிபா ஆட்சி அமைத்தார். கடந்த ஆண்டு அவர் பதவியில் இருந்து விலகினார். அதன் பின்னர் சனே டகாய்ச்சி பிரதமர் ஆனார்.
உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து: எல்டிபி கட்சியின் வெற்றி காரணமாக ஜப்பான் நாட்டில் நிலையான ஆட்சி மற்றும் அரசியல் ரீதியான ஸ்திரத்தன்மை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உள்ளிட்டோர் ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .