2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

‘பிரதமரின் செயற்பாடுகளுக்குதமிழ் அரசியல்வாதி ஒத்து ஊதுகிறார்’

Gavitha   / 2017 ஜனவரி 24 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.நிரோஷினி  

நாட்டில் மீண்டும் பயங்கரவாதச் சூழ்நிலையை ஏற்படுத்த முயற்சிக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாட்டுக்கு, பிரபல தமிழ் அரசியல்வாதியொருவர் ஆதரவளித்து செயற்பட்டு வருவதாக, பிவிதுறு ஹெல உறுமய தெரிவித்தது.  

பிவிதுறு ஹெல உறுமயவின் தலைமை அலுவலகத்தில், நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான செயலாளர் சுகீஸ்வர பண்டார இவ்வாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், 

“வெளிநாடொன்றில் இருந்து, இலங்கைக்கு அதி சக்திவாய்ந்த உபகரணம் ஒன்றை இறக்குமதி செய்ய, முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதில், பிரபல தமிழ் அரசியல்வாதி ஒருவரும் கணிசமான பங்களிப்பை வழங்கி வருகிறார். அவர் தொடர்பில் இந்த அரசாங்கம் எவ்விதத் தகவலையும் வெளியிடவில்லை. அந்த உபகரணம் எதற்காக கொண்டுவரப்படவுள்ளது என்பது தொடர்பிலும் தெளிவுபடுத்தப்படவில்லை. இச்செயற்பாடு, நாட்டில் மீண்டும் தீவிரவாதம் தலைதூக்கிவிடப்பட்டுள்ளதா என்றச் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று அவர் தெரிவித்தார். 

“2001 மற்றும் 2004ஆம் ஆண்டுகளில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில், இது போன்று அதி சக்தி வாய்ந்த உபகரணமொன்று, நோர்வே நாட்டிலிருந்து சிறிய ரக விமானம் மூலம் கொண்டுவரப்பட்டது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலங்களிலேயே இது போன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன. மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தில் இது​போன்ற செயற்பாடுகள் இடம்பெறவில்லை. 2005ஆம் ஆண்டு, இந்நாட்டை மஹிந்த ராஜபக்ஷ பொறுப்பேற்பதற்கு முன்னர் இருந்த நிலைமையே தற்போது உருவாகியுள்ளது.  

ஒரு பக்கத்தில், இந்நாட்டை பிளவுபடுத்தவும் அந்நிய நாட்டுக்கு தாரைவார்த்துக்கொடுக்கவும், இந்ந அரசாங்கம் முயற்சித்து வருகிறது. அந்த முயற்சி கைகூடாவிடின், மறுபுறத்தில் மீண்டும் நாட்டில் பயங்கரவாதத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றது. அதன் முதற்கட்ட நடவடிக்கையே, வெளிநாடொன்றில் இருந்து அதி சக்தி வாய்ந்த உபகரணமொன்றை இலங்கைக்கு கொண்டு வருவதாகும்.  

எனவே, இந்த உபகரணம் தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ​ெதளிவுபடுத்த வேண்டும். அதேபோல், இதற்கு பின்னால் இருக்கும் பிரபல தமிழ் அரசியல்வாதி குறித்தும் கூறவேண்டும்” என்றும் அவர் கூறினார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .