2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

'பழிவாங்கல் கருவியாக கட்சியை பயன்படுத்தாதீர்'

Gavitha   / 2016 மார்ச் 31 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாநூ கார்த்திகேசு

'நீங்கள் பதவிக்கு வந்ததும் அமைச்சுப் பதவியைப்  பெற்றதும் அரசியலில் இருப்பதும் கட்சியால்தான்' என்று தெரிவித்த நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா, தனிப்பட்ட பழிவாங்கலுக்காகக் கட்சியைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்றுப் புதன்கிழமை (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,  'முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகாவுக்கும் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் தனிப்பட்ட பிரச்சினைகள் இருக்கலாம் அல்லது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கும் இடையில் தனிப்பட்ட பிரச்சினைகள் இருக்கலாம்.

அவ்வாறான தனிப்பட்ட பிரச்சினைகளைப் பயன்படுத்தி, பழிவாங்கல்கள் முன்னெடுக்கப்படலாம். அவ்வாறான, பிரச்சினைகள் மற்றும் பழிவாங்கல்களுக்காகக் கட்சியைப் பயன்படுத்தவேண்டாம்.

உங்களுடைய முரண்பாடுகளின் காரணமாக, கட்சியின் ஆதரவாளர்களே பாதிக்கப்படுபவர்' என்றும் அவர் கூறினார்.
'கட்சியை உருவாக்கியவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், இரண்டு நிமிடங்களாவது மௌன அஞ்சலி செலுத்துகின்ற, உலகிலேயே உள்ள ஒரே ஒரு கட்சியென்றால் அது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியேயாகும்.

கட்சியை உருவாக்கியவர்களான எஸ்.டபிள்யூ.ஆர்.டீ பண்டாரநாயக்காவுக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் மரியாதை செலுத்துகின்றோம். அதே மரியாதையைத்தான், ராஜபக்ஷ குடும்பத்தினருக்கும் நாங்கள் வழங்குகின்றோம்' எனத் தெரிவித்தார்.

இதேவேளை, கொழும்பு-02 ஹட்பார்க் மைதானத்தில் நடைபெற்ற ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் யாரும், கட்சியின் கொள்கையைப் பாதிக்கும் வகையில் உரையாற்றவில்லை என்றும் கூறினார்.

'இவ்வாறான நிலையில், சாதி, மத, இன, பேதமற்ற ஒரு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான நல்லாட்சியை, நாட்டில் 2020ஆம் ஆண்டில் உருவாக்குவோம்;' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .