2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

20 நாள் சிசுவின் உடல் தகனம்; மனுவை ஆராயத் திகதி குறிப்பு

R.Maheshwary   / 2021 மார்ச் 30 , மு.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

  கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையில் உயிரிழந்த, பிறந்து 20 நாட்களேயான சிசுவின் உடலைத் தகனம் செய்தமையைச் சவாலுக்கு உட்படுத்தி, சிசுவின் பெற்றோரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை ஆராய்வதற்கு, உயர் நீதிமன்றத்தால் நேற்று (29) திகதி குறிக்கப்பட்டது.

மேற்படி சிசு, கொவிட் 19 தொற்றுக்கு இலக்காகியே உயிரிழந்ததென அறிவித்த வைத்தியசாலை, சிசுவின் சடலத்தைத் தகனம் செய்தமை, அடிப்படை உரிமை மீறல் என்று தெரிவித்தே, இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், அதை, மே மாதம் 25ஆம் திகதியன்று ஆராயப்படுமென, உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழு, அறிவித்தது.

அத்துடன், மேற்படி ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாமின் ஒருவரான நீதியரசர் யசந்த கோத்தாகொட, இந்த மனுவை விசாரணைக்கு உட்படுத்தும் நீதியரசர் குழாமிலிருந்து    நேற்று விலகிக்கொண்டார்.

இந்த மனு, நீதியரசர்களான பிரியந்த ஜயவர்தன, எல்.டி.பீ.தெஹிதெனிய, காமினி அமசேகர, குமுதினி விக்ரமசிங்க மற்றும் யசந்த கோத்தாகோட ஆகியோர் முன்னிலையில் அழைக்கப்பட்டது. இதன்போது, தனது தந்தை, வைத்தியராகக் கடமையாற்றியுள்ள நிலையில், தனிப்பட்ட காரணத்துக்காக, இந்த மனு விசாரணையிலிருந்து தான் விலகிக்கொள்வதாக, நீதியரசர் கோத்தாகொட அறிவித்தார்.

இதன்படி, ஏனைய நீதியரசர்களால், மனுவை ஆராயத் திகதி குறிக்கப்பட்டது.

மொஹமட் ஃபாருக் மொஹமட் பாஹிம் மற்றும் பாத்திமா ஷஃப்னாஸ் ஆகிய தம்பதியால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், தமது சிசுவுக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருந்தமை தொடர்பில், வைத்தியசாலை நிர்வாகத்தினால் எந்தவித ஆவணங்களும் வழங்கப்படவில்லை என்றும் அதனால், வைத்தியசாலையில் சிசு அனுமதிக்கப்பட்டது முதல் சடலம் தகனம் செய்தமை வரையான அனைத்து மருத்துவ ஆவணங்களையும் நீதிமன்றத்தில் பாரப்படுத்த உத்தரவு பிறப்பிக்குமாறும், பெற்றோரின் சம்மதமின்றியே, சடலம் தகனம் செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .