2026 மே 07, வியாழக்கிழமை

90 ரூபாய்க்கு 5 இலட்சம் ரூபாய் செக் எழுத்திய அங்காடி

Mayu   / 2026 மே 07 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நுகர்வோர் விவகார அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையின் பயனாக, அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதல் விலைக்கு அரிசி விற்பனை செய்த பிரபல பல்பொருள் அங்காடிக்கு (Supermarket) பாரிய அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, வெள்ளவத்தை பகுதியில் அமைந்துள்ள குறித்த பல்பொருள் அங்காடியில், சட்டவிரோதமான முறையில் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபைக்குப் புகார்கள் கிடைத்தன. இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, விலை மோசடி இடம்பெறுவது உறுதி செய்யப்பட்டது.

அரசாங்கத்தின் வர்த்தமானி அறிவித்தலின்படி, ஒரு கிலோ உள்ளூர் 'நாடு' அரிசியின் கட்டுப்பாட்டு விலை 230 ரூபாய் ஆகும். இருப்பினும், குறித்த அங்காடியில் ஒரு கிலோ அரிசி 320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு கிலோ அரிசிக்கு 90 ரூபாய் வீதம் பொதுமக்களிடம் இருந்து மேலதிகமாக அறவிடப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.

இந்த முறைகேடு தொடர்பான வழக்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது நுகர்வோரை ஏமாற்றிய குற்றத்திற்காக குறித்த வர்த்தக நிறுவனத்திற்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதவான் தீர்ப்பளித்தார்.

அரிசி விலையைச் செயற்கையாக உயர்த்தி பொதுமக்களைச் சுரண்டும் வர்த்தகர்களைக் கண்டறியும் நோக்கில், நுகர்வோர் விவகார அதிகார சபை தற்போது நாடு தழுவிய ரீதியில் தீவிர சோதனைகளை முன்னெடுத்து வருகின்றது.

பொருட்களைக் கொள்வனவு செய்யும்போது நுகர்வோர் பின்வரும் விடயங்களைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்:

  • பொருளின் மீது அச்சிடப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலையை (MRP) கட்டாயம் சரிபார்க்கவும்.

  • நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதல் தொகை கோரப்பட்டால் அதனை வழங்க வேண்டாம்.

வர்த்தகர்களினால் ஏதேனும் சுரண்டல்கள் அல்லது முறைகேடுகள் இடம்பெறின், பின்வரும் இலக்கத்திற்கு உடனடியாகத் தொடர்புகொண்டு முறைப்பாடுகளைப் பதிவு செய்ய முடியும்:

அவசர அழைப்பு இலக்கம்: 1977 (நுகர்வோர் விவகார அதிகார சபை)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .