2026 மார்ச் 18, புதன்கிழமை

அதுக்கு மறுத்த மருமகள்; போட்டுத்தள்ளிய மாமியார்

S.Renuka   / 2026 மார்ச் 18 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாமியார் மருமகள் சண்டை என்பது பாம்பும் கீரியும் போல நடந்து கொண்டே இருப்பதாக சொல்வார்கள்.. அதேபோல் பாம்பும் கழுகுமாக கூட மோதல்கள் இருக்கும். இதில் ஆணின் துணை யாருக்கு உள்ளதோ அவர்களே கீரியாகவும், கழுகாகவும் இருப்பார்கள். இது வீட்டிற்கு வீடு மாறுபடும். மாமியார் மருமகளை டார்ச்சர் செய்வதாகவும், மாமியாரை மருமகள் டார்ச்சர் செய்வதாகவும் கூறுவது இதன் அடிப்படையில் தான்.. குடிப்பதற்கு டீ போட்டு தராததால், மருமகளை மாமியார் போட்டு தள்ளியிருக்கிறார். கேரளாவில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

மாமியார் மருமகள் இடையே சண்டை வந்தால், இதில் யார் பக்கம் நிற்பது என்று தெரியாமல் ஆண் தவிப்பார். அம்மாவிற்கு ஆதரவாக இருந்தால் மனைவியும், மனைவிக்கு ஆதரவாக இருந்தால் அம்மாவும் பேசமாட்டார்கள். இருவருக்கும் இடையே சண்டையை உண்மையில் தீர்க்க வேண்டியது மகன் தான். குடும்பத்தின் அதிகாரம் யாருக்கு.. யார் என்ன செய்ய வேண்டும்.. ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும் என்று எடுத்து சொல்ல வேண்டிய மகன் பொறுப்பில் இருந்து விலகுவதால், சண்டை அதிகமாகிறது. மலப்புரத்தில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பூக்கோட்டு பாடம் அருகே கூற்றம்பாறை பகுதியில் 58 வயதாகும் சாந்தா என்பவர் தனது மகன், மருமகளுடன் வசித்து வந்தார். சாந்தாவின் மகன் சுனில். இவருடைய மனைவி ரஜிலா (30). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார். சுனில் ஆட்டோ டிரைவராக உள்ளார்.

இதனிடையே மாமியார் சாந்தாவிற்கும், மருமகள் ரஜிலாவிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் செவ்வாய்க்கிழமை (18) காலை சுனில் வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் ரஜிலா, அவரது குழந்தைகள், சாந்தா ஆகியோர் இருந்தனர். 

அப்போது டீ போட்டு தருமாறு ரஜிலாவிடம் சாந்தா கூறினாராம். ஆனால், ரஜிலா மாமியாருக்கு டீ தராமல் இருந்துள்ளார். இதனால் சாந்தா மீண்டும், மீண்டும் டீ கேட்டு உள்ளார். அவ்வாறு கேட்டும் குடிப்பதற்கு மருமகள் டீ போட்டு தரவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த சாந்தா, வீட்டில் விறகு வெட்ட வைத்திருந்த அரிவாளால் ரஜிலாவை சரமாரியாக வெட்டினாராம்.. இதை அங்கிருந்த ரஜிலாவின் குழந்தைகள் தடுக்க முயன்றும், அது முடியாமல் போனது. இதனால் ரஜிலா இரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதைப் பார்த்த குழந்தைகள் கதறி அழுதனர்.

சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து, ரஜிலாவை மீட்டு மலப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 

இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து பூக்கோட்டு பாடம் பொலிஸார் விசாரணை நடத்தியதில், குடிப்பதற்கு டீ போட்டு தராததால் மருமகளை மாமியார் வெட்டி கொன்றது தெரியவந்தது. 

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, சாந்தாவை பொலிஸார் கைது செய்தனர். இந்த சம்பவம் மலப்புரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X