R.Maheshwary / 2021 மார்ச் 31 , மு.ப. 02:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
மகேஸ்வரி விஜயனந்தன்
இலங்கையிலிருந்து யாரும் வெளியேற்றப்படவில்லை என்று அறிவித்த அரசாங்கம், புலம்பெயர்ந்தோர் என யாரும் இல்லை என்றும் புலம்பெயர் என்ற சொல்லை இலங்கை அங்கிகரிக்கவில்லை என்றும் தெரிவித்தது.
இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சிந்தனைகளையோ அல்லது பிரிவினைவாதத்தையோ மேம்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடும் சகல குழுக்களையும் தடை செய்ய இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதெனத் தெரிவித்த அமைச்சரும் அமைச்சரவையின் இணைப் பேச்சாளருமான உதய கம்மன்பில, எமது அரசியலமைப்பின் கீழ் பிரிவினைவாதம் தடை செய்யப்பட்டுள்ளது என்றார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (30) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகச் சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், அவ்வாறான குழுக்கள் அல்லது தனி நபர்களுடன் தொடர்பை வைத்துக்கொள்ள அரசாங்கம் தயாராக இல்லை என்றும் கூறினார்.
அண்மையில் இங்கிலாந்தைத் தளமாகக் கொண்டு செயற்பட்ட சில செல்வாக்கான அமைப்புகள் உள்ளிட்ட பல புலம்பெயர் அமைப்புகளும் தடை செய்யப்பட்டதுடன், 2014ஆம் ஆண்டும் இவ்வாறான பல குழுக்கள் தடை செய்யப்பட்டன. ஆனால், அவை 2015ஆம் ஆண்டில் மீண்டும் அரசாங்கத்தால் பட்டியலிடப்படவில்லையே? என்று, ஊடகவியலாளரின் கேள்வி அமைந்திருந்தது.
இதற்குத் தொடர்ந்து பதிலளித்த அமைச்சர், “இலங்கை அரசாங்கம், வெளிநாட்டினருடன் நெருக்கமாகச் செயற்படும். ஆனால், விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் செயற்பாட்டில் ஈடுபடும் எந்தவோர் அமைப்பும் தனிநபர்களும் இலங்கையில் தடை செய்யப்படுவர்” என்றார்.
இதேவேளை, புலம்பெயர்ந்தோர் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்த அமைச்சர், இலங்கையிலிருந்து யாரும் வெளியேற்றப்படவில்லை என்றும் ஆகவே, புலம்பெயர்ந்தோர் என யாரும் இல்லை என்றும் புலம்பெயர் என்ற சொல்லை இலங்கை அங்கிகரிக்கவில்லை என்றும் கூறினார்.
டயஸ்போரா என்பது கிரேக்கச் சொல் என்றும் இஸ்ரேலில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்ட வேளையில், அந்தச் சொல் பயன்படுத்தப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.
வெளிநாடுகளில் உள்ள இலங்கைச் சமூகத்தைச் சேர்ந்தவர்களுடன் இலங்கை நெருங்கிச் செயற்படும். ஆனால், விடுதலைப் புலிகள் அமைப்பின் கொள்கையை ஊக்குவிக்கும் எந்த அமைப்பையும் தடை செய்யும்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .