2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

ஒரே பார்வையில் கொரோனா...

Princiya Dixci   / 2020 நவம்பர் 09 , பி.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பில் தற்போது வரையிலும் கிடைத்துள்ள செய்திகளின் துளிகள் சிலவற்றை இங்கு காணலாம். 

கொரோனா வைரஸிலிருந்து மீண்டவர்களிடமிருந்து, வைரஸ் மீண்டும் தொற்றும் ஆபத்தில்லையென தேசிய தொற்றுநோய் வைத்தியசாலையின் மருத்துவர் ஆனந்த விஜயவிக்கிரம தெரிவித்தார்.    

நோய் அறிகுறிகள் தென்படாத கொரோனா தொற்றுக்குள்ளானவரின் மூலம் வைரஸ் பரவும் ஆபத்து நிலை உயர் மட்டத்தில் காணப்படுவதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்படினும் சுகாதார வழிமுறைகளை முறையாக கடைப்பிடிக்குமாறு, சுகாதார அமைச்சு, பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

அத்தியாவசிய தேவைக்காக மாத்திரம் சமூகத்துக்குள் பிரவேசிக்குமாறும் வயோதிபர்கள், நோய்வாய்ப்பட்டவர்களை, வீட்டிலேயே இருக்குமாறும் சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.  

ஊரடங்கு அமுலில் இருந்த காலப்பகுதியிலும் பார்க்க, ஊரடங்கு நீக்கப்பட்டதன் பின்னர், மக்கள் மிகுந்த பொறுப்புடன் செயற்பட வேண்டுமென, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்தார். 

சிலாபத்தில் உள்ள  மாவட்ட பொது வைத்தியசாலையில், இம்மாதம் 7ஆம் திகதி உயிரிழந்த நபருக்குக் கொரோனா வைரஸ் தொற்று இல்லையென சடலத்தின் மீதான பிசிஆர் பரிசோதனையிலே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுகின்றனர் என கொரோனா பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மைய்யம் தெரிவித்துள்ளதோடு, இரண்டாவதாக அதிகளவான கொரோனா வைரஸ் தொற்றாளர்கள், கம்பஹா மாவட்டத்தில் இனங்காணப்பட்டுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளது. 

வத்தளை, ஹெந்தல பிரதேசங்களில் 20 தொற்றாளர்கள், நேற்று (08) இனங்காணப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரி மாவட்டத்துக்குள் நேற்று வரை கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 100ஆக அதிகரித்துள்ளதென, இரத்தினபுரி மாவட்ட செயலாளர் மாலனி லொக்குபோத்தாகம தெரிவித்தார். அத்துடன், 5,316 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர்  தெரிவித்தார்.

பேலியகொட மீன் சந்தையில் இருந்து மீன் கொள்வனவு செய்து, அம்பலாங்கொட பிரதேசத்தில் விற்பனை செய்த, மீன் வியாபாரி உட்பட அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. 

மேல் மாகாண பொலிஸ் நிலையங்களில் பணிபுரியும் 256 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

இவர்களில் 6 பேர் பூரண சுகமடைந்துள்ளனரெனவும் மேலும் 250 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், 317 பொலிஸார் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், 1,447 பொலிஸார் சுயதனிமையில் இருப்பதாகவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றுக் காலப் பகுதியில், 2020.09.25ஆம் திகதி அல்லது அதற்குப் பின்னர் வழங்கப்பட்ட வாகனத் தண்டப்பணப் பத்திரத்துக்கு மேலதிக பணம் அறவீடு இல்லாமல் செலுத்த முடியுமென, தபால் மா அதிபதி ரஞ்சித் ஆரியரத்ன அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அறுவர் அடையாளம் காணப்பட்டதையடுத்து, நிக்கவரட்டிய நகரிலுள்ள சகல வர்த்தக நிலையங்களையும் இன்றிலிருந்து (09) மூன்று நாள்கள் மூடுவதற்கு, நிக்கவரட்டிய வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளது. 

தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவதற்குத் தேவையான பொருள்களைக் கொள்வனவு செய்வதற்காக நகருக்கு வருவோரின் தொகை அதிகரிக்கும் என்பதால், நுவரெலியா மாவட்டத்தின் பிரதான நகரங்களை, இம்மாதம் 16ஆம் திகதி வரை மூடுவதற்கு, பிரதேசங்களுக்குப் பொறுப்பான பொலிஸாரும் உள்ளூராட்சி மன்றங்களும் இணைந்து ஆலோசித்து வருகின்றன. 

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டு, இன்று (09) காலை நீக்கப்படும் வரை, ஊரடங்கு உத்தரவை மீறிய 2,923 பேர் மேல் மாகாணத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். 

கடந்த வெள்ளிக்கிழமை அடையாளம் காணப்பட்ட கொரோனா லைரஸ் தொற்றாளி, தனிமைப்படுத்தலை மீறிச் சுற்றித் திரிந்தமை, அம்பலமானமையை அடுத்து, கிளிநொச்சி மாவட்டத்தின் ஜெயபுரம் வடக்கு, தெற்கு பிரதேசங்கள் முற்றாக முடக்கப்பட்டுள்ளன. 

கொழும்பு மத்திய தபால் பரிமாறல் சேவையில் வரையறுக்கப்பட்ட கடமைகள் சிலவற்றைச் செயற்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தபால் மா அதிபர் அறிவித்துள்ளார். 

இதன்படி, சர்வதேச விரைதூதர் தபால் சேவை ( EMS Courier), வர்த்தக தபால் (Business mail),உள்ளூர் விரைதூதர் தபால் சேவை ( SL Post Courier) இன்று (09) முதல் செயற்பாடுகளுக்காகத் திறக்கப்பட்டுள்ளன. 

மினுவங்கொட மற்றும் பேலியகொட கொத்தணியில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 10,451 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

மொத்த விற்பனை பொருளாதார மையங்களை மீளத் திறந்து வைக்கும் செயல்முறைக்கு அமைவாக, பொதுமக்கள் நலன் கருதி, நாரஹென்பிட்ட பொருளாதார மத்திய நிலையத்தின் நாளாந்தப் பணிகளை மீள ஆரம்பிக்கும் செயற்பாடுகள், சிவில் பாதுகாப்புப் படையினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நாட்டில் இதுவரையில் 13,929 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.  35 மரணித்துள்ளனர். 

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து இதுவரையில் 8,880 பேர்  பூரணமாக குணமடைந்துள்ளனர் என  சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேவேளை, 5,014 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .