Editorial / 2026 மார்ச் 31 , பி.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
நான் அன்றைய தினம் காலை 10:30 மணிக்கு மட்டக்களப்பிற்குப் போவதற்காக, வவுணதீவு சந்தியில் குழந்தையுடன் பேருந்திற்காகச் சென்றிருந்தேன். அங்கு பேருந்துக்காக ஒரு வயோதிபப் பெண் காத்துக்கொண்டிருந்தார்; அவருக்கு அருகில் நான் சென்று நின்றேன். அப்போது எங்களுக்கு முன்னால் ஓர் ஆட்டோ வந்து நின்றது. "எங்கே போகப்போகின்றீர்கள்?" என அவர்கள் கேட்டார்கள். நான் "நகருக்கு" என்றேன்.
அப்போது ஆட்டோவில் ஏறுமாறு அவர்கள் கேட்டனர். நான் "என்னிடம் பணம் இல்லை, எவ்வளவு?" எனக் கேட்டேன். "100 ரூபாய்" என்றனர். அப்போது நான் குழந்தையுடன் ஏறினேன்; அங்கு இருந்த அந்த வயோதிபப் பெண்ணும் ஏறினார்.
ஆட்டோ நகரை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஆட்டோவில் இருந்த அந்த வயோதிபப் பெண் இறங்கினார். அப்போது "நீங்கள் எங்கே போகப்போகின்றீர்கள்?" என என்னிடம் கேட்டனர். நான் "சத்தார் புடவைக்கடை வீதியில் விடுமாறு" தெரிவித்தேன். அங்கு என்னைக்கொண்டு சென்று விடும்போது, ஆட்டோவில் இருந்த பெண் "தான் சேலை எடுக்கப்போவதாகவும், நீங்கள் ஆட்டோவில் வருமாறும்" கேட்டார். நான் "சரி வருகின்றேன்" எனத் தெரிவித்துவிட்டு, சத்தார் கடையடியில் காத்திருந்தேன்.

அப்போது நான் குழந்தையுடன் அங்கிருந்து நகைக் கடைக்குச் சென்று, ஈடு வைத்திருந்த தங்க மோதிரத்தை மீட்பதற்காக 24,000 ரூபாய் பணத்தைச் செலுத்தி, அதனை மீட்டுக்கொண்டேன். அந்தப் பெண் சொன்ன கடைக்கு முன்னால் வந்தபோது, அங்குக் காத்திருந்த அந்தப் பெண்ணைச் சந்தித்தேன். அவர் ஆட்டோ ஓட்டுநருக்குத் தொலைபேசியில் அழைத்துப் பேசினார். அப்போது அவர் "மணிக்கூட்டுக் கோபுரம் பகுதிக்குக் கூட்டி வருமாறு" தெரிவித்தார்.
நானும் அந்தப் பெண்ணும் அங்கிருந்து மணிக்கூட்டுக் கோபுரம் நோக்கிச் சென்றோம். அவர் எனக்குப் பின்னால் வந்தார். அங்கு நின்ற அதே ஆட்டோவில் ஏறிக்கொண்டோம். அதன் பின்னர் அங்கிருந்து பொதுச்சந்தை வீதி ஊடாகச் சென்று, அங்கு ஆட்டோவை நிறுத்திவிட்டு அதில் இருந்து இறங்கிச் சென்றுவிட்டு, 10 நிமிடங்களின் பின்னர் வந்து அங்கிருந்து பிரதான பேருந்து நிலைய வீதியால் வவுணதீவு நோக்கிச் சென்றோம்.
அப்போது வலையிறவுப் பாலத்தால் சென்றுகொண்டிருந்தபோது, அந்தப் பெண் 3 குளிர்பானப் (Juice) போத்தல்களை வாங்கினார். எனது மகளுக்கும் அவருக்கும் பச்சை நிறக் குளிர்பானப் போத்தலை எடுத்துக்கொண்டு, எனக்கு விளாம்பழச் சாற்றைத் தந்தார். அதனை நான் குடித்தேன். அப்போது வவுணதீவு சந்தியில் அந்தப் பெண் இறங்கிக்கொண்டார். அதன் பின்னர் இளைஞன் ஒருவர் அந்த ஆட்டோவில் தாள்கத்தியுடன் ஏறிக்கொண்டார்.
அப்போது நான் கேட்டேன், "ஏன் தாள்கத்தியுடன் ஏறுகின்றார்?" என்று. அதற்கு அவர் "வீட்டில் மாட்டுக்குப் புல் வெட்டுவதற்குச் செல்வதாகத்" தெரிவித்தார். ஆட்டோ சென்றுகொண்டிருந்தபோது நான் என்னை "தாண்டியடியில் விடுமாறு" சொன்னபோது "சரி" என்றனர். ஆனால், கன்னங்குடா சந்தியால் சென்றுகொண்டிருந்தபோது தாண்டியடி நோக்கிச் செல்லாமல், பாவற்கொடிச்சேனை பகுதியை நோக்கிப் பயணித்தனர். நான் கேட்டேன் "ஏன் இந்த வீதியால் போகின்றீர்கள்?" என்று. அப்போது "அந்த இளைஞனைக்கொண்டு சென்று விட்டுவிட்டு உங்களைக்கொண்டு சென்று விடுவதாகத்" தெரிவித்தார். அடுத்த ஒரு இரு நிமிடங்களில் நான் மயக்கமுற்று ஒன்றும் தெரியாமல் போனேன்.
இந்த நிலையில், "வீட்டில் வெள்ளம் ஏறிவிட்டது, கட்டிலில் இருக்கிறேன்" என்று நினைத்துக்கொண்டு மேல் நோக்கிப் பார்த்தபோது வானம் தெரிந்தது. அப்போது "என்னடா வானம் தெரியுது?" என நினைத்துக்கொண்டு, கட்டையில் காலை வைத்துக்கொண்டு நீரில் கீழ் நோக்கி ஒரு தரம் மூழ்கினேன். பின்னர் மேல் நோக்கி வந்தேன். இவ்வாறு இரண்டு தடவை செய்தேன். நான் முற்றாக நீரில் நனைந்த நிலையில், மூன்றாம் தரம் மூழ்கி எழும்போது "அம்மா... அம்மா..." எனச் சத்தமிட்டேன்.
அதன் பின்னர் கணவரைக் கூப்பிட்டுச் சத்தமிட்டேன். "மீன்பிடிக்கப் போனீர்கள், இவ்வளவு நேரமும் என்ன செய்கின்றீர்கள்?" எனக் கத்தினேன். அதன் பின்னர் "பிள்ளை... பிள்ளை..." எனக் கத்தினேன். அதன் பின்னர் யார் என்று தெரியாதவர்கள் என் கையில் கயிற்றைத் தந்து இழுத்தனர் என்றார்.
கனகராசா சரவணன்
18 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
2 hours ago