2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

‘கொரோனா தாயத்து’ கொடுத்து பாபா மோசடி

Editorial   / 2021 மே 22 , பி.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாகவுர்: ராஜஸ்தானில் ரூ.250 கொடுத்தால் கொரோனாவை விரட்டும் தாயத்து கொடுப்பதாக ஏமாற்றும் பாபாவை பிடித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலம் நாகவுர் மாவட்டம் பர்பட்சர் கிராமத்தில், கொரோனா தொற்று வராமல் இருப்பதாற்காக மக்களிடம், பழங்கால மூடநம்பிக்கைகளில் மூழ்கிபோன சிலர் உள்ளூர் மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

அவர்கள், பசுமாட்டின் கோமியம், கங்கை நீர் ஆகியவற்றை கலந்து அவர்களை நாடி வருவோருக்கு கொடுக்கின்றனர்.

பின்னர், கொரோனாவிலிருந்து தப்பிக்க தண்ணீர் போத்தல் மற்றும் சிவப்பு நூலில் கட்டப்பட்ட தாயத்து தகடுகளை தருகின்றனர். சிலருக்கு கழுத்தில் சிவப்பு நூலில் கட்டப்பட்ட தாயத்துக்களை கொடுக்கின்றனர்.

இந்த தாயத்து கயிறுகளை கட்டினால், கொரோனா நோய் வராது என்று கூறுவதால், மக்களும் வேறுவழியின்றி அப்பகுதியில் வசிக்கும் பாபா என்ற முதியவரை நாடிச் செல்கின்றனர். உலகெங்கிலும் டாக்டர்களே, கொரோனாவை வீழ்த்த முடியாமல் தவித்து வரும்நிலையில், இதுபோன்ற மோசடிகள் கிராமப்புறங்களில் அதிகரித்து வருகின்றன.

இதுகுறித்து அப்பகுதிமக்கள் கூறுகையில், ‘பாபாவிடம் தாயத்து வாங்கிக் கட்டிக் கொண்டால்ல, ‘கொரோனா - வரோனா’ என்று எதுவும் நம்மை அண்டாது. அவர் கொடுக்கும் தண்ணீரை ஒரு நாளைக்கு 3 முறை குடிக்க வேண்டும். மந்திரித்து கொடுக்கப்படும் தாயத்து மற்றும் தீர்த்தத்திற்கு 250 ரூபாய் கட்டணம் கொடுக்க வேண்டும்’ என்றார்.

இதுகுறித்து, மக்களை ஏமாற்றி வரும் பாபாவிடம் கேட்டபோது, அவர் கொரோனாவின் பெயரைக் கேட்டு சத்தமாக விசித்திரமாக சிரித்தார். ஒரு கத்தியுடன் வந்து இருக்கையில் அமர்ந்தார். கத்தியை மேலேயும் கீழும் மூன்று நிமிடங்கள் மந்திரங்களை கூறி சுழற்றினார். பின்னர், ‘மருத்துவமனைக்குச் சென்றால், நீங்கள் இறந்துவிடுவீர்கள். 2,000 ரூபாய் கொடுங்கள். நான் கொடுக்கும் தீர்த்தத்தை  குடிக்க வேண்டும். கழுத்தில் சிவப்பு நூலில் கட்டப்பட்ட தாயத்துக்களை அணிய வேண்டும். அதன் பிறகு எல்லாம் சரியாக இருக்கும்’ என்றார். இதுபோன்று சிலர் கிராமங்களில் மக்களை ஏமாற்றி வருவதாக உள்ளூர் பத்திரிகைகளில் ஆதாரத்துடன் செய்தி வெளியானது.



அதையடுத்து, அந்த கிராமத்திற்கு சென்ற சுகாதாரத் துறையினர் மற்றும் பொலிஸார் சம்பந்தப்பட்ட பாபாவை விசாரணைக்காக அழைத்து சென்றனர். மேலும், கொரோனா குறித்து எச்சரிக்கையுடன் இருக்க மக்களிடம் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .