Mayu / 2024 மே 01 , பி.ப. 02:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒவ்வொரு மதங்களுக்கும் மத சடங்குகள் முக்கியமானவை. திருமணத்தின் போது, இந்த சடங்குகள் முக்கியமாக கடைப்பிடிக்கப்படும். சிலர், சடங்குகளைச் செய்யாது, பதிவு திருமணத்துடன் நிறைவு செய்துகொள்கின்றனர். எனினும், சமய சடங்குகள் செய்யப்படாத திருமணம் செல்லுப்படியாகாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இந்தியாவின் உத்திரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த தம்பதியினர் அவர்களது திருமணம் செல்லாது என அறிவிக்க வேண்டி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இந்து முறைப்படி திருமண சடங்குகள் எதுவும் நடைபெறவில்லை எனவும் திருமண சான்றிதழ் பெற வேண்டி சிறிய விழா ஏற்பாடு செய்து உத்திரப் பிரதேச சட்டப்படி சான்றிதழ் பெற்றோம் எனவும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, இந்து திருமண சட்டங்களின் படி நடத்தப்படாத திருமணங்கள் குறித்தும், அதனை ஒழுங்குபடுத்த கோரியும் உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே பொதுநல மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன.
இந்த வழக்குகள் மீதான விசாரணை நடத்தப்பட்டு அது தொடர்பான பல்வேறு உத்தரவுளை உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு வெளியிட்டுள்ளது. இந்து திருமணத்தில் அக்னி சாட்சியாக நடைமுறையில் இருக்கும் சடங்குகள் கொண்டு திருமணம் நடைபெற வேண்டும் எனவும் இந்து திருமணம் சட்டம் பிரிவு 5இன் படி, திருமண விழா நடைபெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, பிரிவு 7இன் படி இந்த சடங்குகள் நடைபெறவில்லை என்றால் திருமணம் செல்லாது. பிரிவு 8இன் படி இந்துமுறைப்படி சான்றிதழ் பெறுவது எளிது எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
அக்னி சாட்சி போன்ற இந்து சடங்குகளின்படி ஒரு இந்து திருமணம் செய்யப்படாவிட்டால், அந்த திருமணம் இந்து திருமணமாக கருதப்படாது. தேவையான சடங்குகள் செய்யப்படாத நிலையில், அது இந்து திருமண சட்டத்தின் கீழ் ஒரு திருமணமாக அதனை கருத முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
எந்த மதமாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் உரிய திருமண விதிகளை பின்பற்றாமல், ஒரு ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் கணவன்-மனைவி என்ற அந்தஸ்தைப் பெற முடியாது எனவும் ஆண் பெண் என இருவரும், கணவன் – மனைவி என்ற அந்தஸ்தைப் பெற வேண்டும் என்றால், திருமண சட்ட விதிகளின் கீழ் செல்லுபடியாகும்படி திருமணவிழாவை நடத்த வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், திருமணம் என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஒரு உறவை ஏற்படுத்தி, அவர்களை குடும்பமாக திகழ வைக்கும் ஒரு முக்கிய நிகழ்வு எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்து திருமணச் சட்டம், 1955 இன் பிரிவு 7 இன் கீழ், மத சடங்குகளுக்கு ஒரு சிறப்பு இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்து முறைப்படி திருமண சான்றிதழ் வேண்டும் என்றால் அவர்கள் அதற்கான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு கூறியுள்ளது.
5 hours ago
25 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
25 Apr 2026