2026 பெப்ரவரி 10, செவ்வாய்க்கிழமை

சமய வைபவத்தில் நெரிசல்: 134 பேர் பலி

Editorial   / 2024 ஜூலை 03 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

உத்தரப்பிரதேசம் ஹாத்ரஸ் சம்பவத்தில் பலி எண்ணிக்கை 134 ஆக அதிகரிதுள்ளது. இதற்கு காரணமான போலே பாபா தலைமறைவாகி உள்ளார். அவரைப் பொலிஸார் தேடி வருகின்றனர்.

நாட்டையே உலுக்கிய துயரச் சம்பவம், உ.பி.யின் மேற்குப்பகுதியிலுள்ள ஹாத்ரஸ் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (02)இடம்பெற்றுள்ளது.

ஹாத்ரஸ் மாவட்டத்தின் சிக்கந்தராராவ் தாலுகாவின் முகல்கடி கிராமத்தில் ஆன்மிகக் கூட்டம் நடைபெற்றது. இதை சாக்கார் நாராயண் சாகர் விஷ்வ ஹரி என்பவர் நடத்தி இருந்தார். ஆன்மிகக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு பலியானோர் எண்ணிக்கை 134 ஆக அதிகரித்துள்ள நிலையில் அந்த கோர விபத்து குறித்து மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

  சிறிய அளவிலானக் கூட்டம் எனக் கூறி ஹாத்ரஸ் மாவட்ட அரசு நிர்வாகத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. கூட்டத்துக்கு ஏற்ற வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் முறையாக செய்யப்படவில்லை. உ.பி காவல்துறை தரப்பில் வெறும் 48 பொலிஸார் பாதுகாப்பு பணிக்கு அமர்த்தப்பட்டிருந்தனர்.

கூட்டத்தின் முக்கிய நிர்வாகத்தை போலே பாபாவின் சீடர்கள் கையில் எடுத்துக் கொண்டனர். போலே பாபா சீடர்களில் சுமார் 12,500 பேர் கூட்டத்தின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சற்று மழை பெய்திருந்தாலும் கோடை வெப்பம் இன்னும் உபியில் குறையவில்லை. ஈரப்பதமும் அதிகரித்த நிலையில் கூட்டத்தின் பெரிய பந்தலில் காற்று வசதியும் குறைவாக இருந்துள்ளது.

மதியம் சுமார் 3.00 மணிக்கு கூட்டம் முடிந்தவுடன், முதல் நபராக போலே பாபா கிளம்பியுள்ளார். அவர் வெளியில் சென்ற பின் பக்தர்கள் வெளியேறலாம் என அறிவிப்பும் அளிக்கப்பட்டிருந்தது. அப்போது, பாபாவின் பாதங்களில் ஆசிர்வாதம் பெற பக்தர்கள் முண்டியடித்துள்ளனர்.

அந்த சமயத்தில்தான் கீழே விழுந்த சிலரை தெரியாமல் கூட்டத்தினர் மிதித்தபடி முந்தியுள்ளனர். இதனால், தொடர்ந்து வந்தவர்களும் கீழே விழுந்து, நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பிறகு கூச்சல், குழப்பத்துடன் கூட்டத்தினர் வெளியேறியபோதும் வாசல்களில் நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவும், பக்தர்களில் பலரும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழத் துவங்கி உள்ளனர். சில நிமிடங்களில் 100 கணக்கானோர் உயிரிழந்தனர்.

  தனக்காக கூடியப் பக்தர்களை பற்றி கவலைப்படாமல் போலே பாபா சொகுசு வாகனத்தில் அங்கிருந்து கிளம்பியுள்ளார். சம்பவத்தை போன் மூலம் கேள்விப்பட்டு அவர் திரும்பி வரவும் இல்லை. தனக்காக பலியான பக்தர்களை காண அந்த போலே பாபா, மருத்துவமனைகளுக்கும் செல்லவில்லை. மாறாக, தலைமறைவானவர் தன் செல்போனையும் அணைத்து வைத்துக் கொண்டார்.

இந்நிகழ்ச்சி மீது வழக்கு பதிவு செய்த உபி பொலிஸார் நிர்வாகத்தினரை தேடி வருகின்றனர். போலே பாபாவையும் பொலிஸாரால் பிடிக்க முடியவில்லை.

இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 134 என உயர்ந்திருப்பதாக உ.பி தலைமை செயலாளர் மனோஜ் குமார்சிங் தெரிவித்துள்ளார். இவர்களில் 126 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அலிகர் முஸ்லிம் பல்கலைகழக மருத்துவக் கல்லூரி, ஏட்டா மற்றும் ஹாத்ரஸ் அரசு மருத்துவமனைகளில் பலர் காயம்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். இந்த மருத்துவமனைகளின் பிணவறைகளில் பலியான உடல்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.இதனிடையே, இறந்த உடல்களின் மீது போர்த்துவதற்கும் போர்வையும் இல்லாமல் அப்படியே கிடத்தப்பட்டிருந்த. காட்சியை அங்கு பாதுகாப்பு பணியிலிருந்து உ.பி காவலர் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

நெரிசலில் பலியானவர்களில் பலரும் குறித்த நேரத்தில் சிகிச்சை கிடைக்காதமையால் இறந்திருப்பதாகத் தெரிகிறது. அரசு மருத்துவமனைகளில் தேவையான அளவில் மருத்துவர்கள் இல்லாமல் போனதும் காரணம்.

இக்கூட்டத்தில் அப்பகுதியை சுற்றியுள்ள கிராமவாசிகள் சுமார் 1.25 லட்சம் பேர் கூடியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள். உழைக்கும் வர்கத்தினரான இவர்கள் அனைவரும் போலே பாபாவிடம் வந்தால் தம் வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கூட்டத்துக்கு வந்துள்ளனர்.

அனைவரது நம்பிக்கையும் வீணாகக் காரணமான போலே பாபா மட்டும் பிரச்சனையின்றி அங்கிருந்து தப்பியுள்ளார். அப்பாவி கிராமவாசிகள் தம் உறவுகளை இழந்து தவிப்பதுடன் அவர்கள் வாழ்க்கை மேலும் சிக்கலுக்கு உள்ளாகி விட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .