2026 மே 04, திங்கட்கிழமை

தேங்காய் எண்ணெய் குறித்து ’வீண் அச்சம் வேண்டாம்’

R.Maheshwary   / 2021 மார்ச் 31 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

         ம​கேஸ்வரி விஜயனந்தன்

இலங்கையர்களுக்கு அதிகமாகத் தேங்காய் எண்ணெயை வழங்கும் எண்ணத்தில், “பாம்” எண்ணெக்கான வரியை அதிகரித்து, தேங்காய் எண்ணெய்க்கான வரியை இந்த அரசாங்கம் குறைத்த்தெனத் தெரிவித்த அமைச்சரும் அமைச்சரவையின் இணைப் பேச்சாளருமான ரமேஸ் பத்திரண, “பாம்” எண்ணெய் இறக்குமதியின் பின்னணியில் இருப்பவர்களே தேங்காய் எண்ணெய் குறித்த அச்சத்தை ஏற்படுத்துவதாகத் தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகச் சந்திப்பில் தொடர்ந்துரைத்த அமைச்சர்,  ஆயிரக்கணக்கானவர்கள் எதிர்ப்புத் தெரிவித்த  இலங்கையின் முள்ளுத்தேங்காய் உற்பத்தியைத் தடுத்து நிறுத்த, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்தாரென்றும் கூறினார்.

பாம் எண்ணெயை இறக்குமதி செய்த குழுவினரே, இன்று இந்தத் தேங்காய் எண்ணெய் பிரச்சினையின் பின்னணியில் உள்ளனரென்றும் அவர்களே தேங்காய் எண்ணெய் குறித்த பயத்தை மக்களுக்கு ஏற்படுத்துகின்றனர் என்றும் கூறினார்.

இலங்கையின் ஆரம்ப காலங்களில் பயன்படுத்தப்பட்ட தேங்காய் எண்ணெய், இலங்கையிலேயே உற்பத்தி செய்யப்பட்டதென்றும் சிறியளவே ஏனைய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன என்றும், அவ்வாறு இறக்குமதி செய்யப்படுவை கட்டாயமாக சுகாதார அமைச்சின் பரிந்துரை மற்றும் தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் பரிந்துரைக்கு அமைய இலங்கைத் தர நிர்ணய சபை மூலம் முன்னெடுக்கப்படும் பரிசோதனையின் பின்னரே விற்பனைக்காக சந்தைக்கு விநியோகிக்கப்படும் என்றார்.

இந்தத் தேங்காய் எண்ணெய்ச் செயற்பாடு குறித்து அரசாங்கம் கடுமையான நடவடிக்கைளை முன்னெடுப்பதுடன், புற்று நோயை உண்டாக்கும் பதார்த்தம் அடங்கிய தேங்காய் எண்ணெய், சந்தையில் விற்பனைக்காக விடுவிக்கப்படவில்லை என்றும் இது குறித்து ஆய்வு ஒன்று முன்னெடுக்கப்படுவதாக சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவித்ததாகவும், அமைச்சர் தெரிவித்தார்.

இந்த விடயம் குறித்து, சுங்கத் திணைக்களத்தால் கடுமையான ஆய்வுகள் முன்னெடுக்கபடுவதாகவும் எனவே இது குறிது எவரேனும் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டால், அவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்த அவர், தேங்காய் எண்ணெய் குறித்து எவ்வித அச்சமும் கொள்ள வேண்டாமென பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்தார்.

அத்துடன் சட்டச் செயற்பாடுகள் முன்னெடுக்கபடுபவதால், முள்ளுத் தேங்காய் உற்பத்திக்கா தடையை உத்தியோகப்பூர்வமாக வர்த்தமானியில் வெளியிடுவதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளதென்றும் விரைவில் அது தொடர்பான வர்த்தமானி வெளிவரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .