Editorial / 2021 ஏப்ரல் 05 , மு.ப. 08:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
கணக்குகளை ஆராயுமாறு கோரிக்கை
21க்குப் பின்னர் வீதியில் இறங்குவோம்
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உடனடியாக அமுல்படுத்துமாறு கோரிக்கை விடுத்த பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துமாறும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.
“ உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில், விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துமாறு நான், மிகவும் பொறுப்புடனும் ஆர்வத்துடனும் கேட்கின்றேன்” என்றார்.
உயிர்த்த ஞாயிறு விசேட ஆராதனைகள், திருப்பலி ஒப்புகொடுத்தல், நாடளாவிய ரீதியிலுள்ள தேவாலயங்களில் கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் நேற்று (04) முன்னெடுக்கப்பட்டன.
பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில், உயிர்த்த ஞாயிறு விசேட வழிபாடுகளும் திருப்பலி ஒப்புக்கொடுத்தலும் கொழும்பு, கொட்டாஞ்சேனை, சென். லூசியா தேவஸ்தானம், நீர்கொழும்பு கட்டுவா பிட்டிய தேவாலயங்களில் முன்னெடுக்கப்பட்டன.
அதன்பின்னர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்., 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதியன்று மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் போது, தங்களுடைய உறவுகளை இழந்தவர்களும், அவயவங்களை இழந்தவர்களும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை சுற்றி சூழ்ந்திருந்தனர்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர்,
எங்களுக்கு சில வேளைகளில் வெட்கம் ஏற்படுகின்றது. எங்களுடைய முன்னாள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக கூறியிருக்கின்றார். அவ்வாறான கதைகளை ஆடைகளை உடுத்திகொண்டா? அவர் கூறுகின்றார் என நான் கேட்கவிரும்புகின்றேன் எனத் தெரிவித்த பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, மனிதர்களின் மரணத்தை தெரிந்துகொண்டு, தன்னுடைய பொறுப்பை மறந்து, வெளிநாட்டுக்கு ஓடிய முன்னாள் ஜனாதிபதி, மீண்டுமொரு தடவை எவ்வாறு ஜனாதிபதித் தேர்தலில் வாக்குகளைக் கேட்கப்போகின்றார் எனக் கேட்டார்.
“அவரால், ஒரு கட்சியின் தலைவராக எப்படி இருக்கமுடியும். ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரகாரம் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். குற்றவாளியாக அவர், இனங்காணப்பட்டுள்ளார். ஆகையால், அவருக்கு எதிராக சட்டரீதியில் எடுக்கப்படவேண்டிய செயற்பாடுகளை எடுப்பதற்கு இன்னும் தாமதிக்க எவ்விதமான தேவையும் இல்லை” என்றார்.
உங்களுடைய கரங்களில் தவறுகள் இடம்பெற்றுள்ளன. அந்த கைகளை கழுவிக்கொண்டு நல்லவர்களாகிவிட முயற்சிக வேண்டாம், வீட்டுக்குச் சென்று வீட்டில் ஏதாவது வேலைகள் இருக்குமாயின் அதனை கவனிக்குமாறும் அவ்வாறான தலைவர்களிடம் தான் கேட்டுக்கொள்கின்றேன் என்றும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தனதுரையில் தெரிவித்தார்.
இரண்டாவதாக பொலிஸில் சிரேட பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவர், மலைப்பாங்கான பிரதேசத்துக்கு இடமாற்றப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் (உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள்) தொடர்பில் தெரிந்திருந்தும் எதனையும் செய்யவில்லையென அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அதற்காக இன்னும் இன்னும் குழுக்களை நியமித்துகொண்டு, தேடிக்கொண்டிருக்கவேண்டிய தேவையில்லை, அறிக்கையில் தெளிவாக சில விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆகையால் அப்பரிந்துரைகளை உடனடியாக செயற்படுத்தவேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், இன்னும் அமுல்படுத்தாது மாதங்கள், வருடங்களாக இன்னும் ஏன் பார்த்துகொண்டிருக்கின்றீர்கள் என ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திடம் அவர் கேட்டார்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய சிலர், சுதந்திரமாக சுற்றித்திரிகின்றனர், அமைச்சர்கள் பாராளுமன்றத்தில் அமர்ந்திருக்கின்றனர். சஹ்ரானுடன் நன்றாக சிரித்துபேசி மகிழ்ந்து கொடுக்கல், வாங்கல்களை மேற்கொண்டவர்கள், இன்னும் சிரித்துகொண்டுதான் இருக்கின்றனர்.
இது எங்களை நிந்திக்கும் செயல், அவர்களின் வங்கிக் கணக்கு வழக்குகளை சோதனைக்கு உட்படுத்தி, எவ்வாறான கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றன. எவ்வாறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன என்பது தொடர்பில் தேடியறிவது கட்டாயமாகும்.
இன்னும் பொறுமையாக இருக்கின்றோம், எதிர்வரும் 21ஆம் திகதிக்கு முன்னர், எவையும் அமுல்படுத்தப்படவில்லையெனில் நாங்கள் வீதிக்கு இறங்குவோம் என்றார்.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .