2025 மே 16, வெள்ளிக்கிழமை

'புதிய அரசியல் சாசனமானது இலங்கை வாழ் மக்களுடைய இறைமையின் அடிப்படையில் நிறுவப்பட வேண்டும்'

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 18 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்

புதிய அரசியல் சாசனமானது இலங்கை வாழ் அனைத்து மக்களுடைய இறைமையின் அடிப்படையில் நிறுவப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

அவ்வாறான  அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்கு நாட்டிலுள்ள சகல இனங்களையும் சார்ந்த அரசியல் தலைவர்களும் அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும். அவ்வாறு செயற்பட்டாலே பிளவுபடாத நாட்டுக்குள் அனைவரும் ஒற்றுமையாக வாழ முடியும் எனவும் அவர் கூறினார்.
திருகோணமலை கோட்டக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில்; விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் இன்று (18) நடைபெற்ற பொங்கல் விழாவில் முதன்மை அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, '30 வருடகாலமாக நிலவிய கொடூர யுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. மீண்டும் யுத்தம் இடம்பெற வேண்டும் என்று நாம் யாரும் விரும்பவில்லை. வன்முறை இல்லாத இந்த நாட்டில் அனைவரும் ஒருமித்து வாழ வேண்டும்' என்றார்.

'ஆயினும், அன்று வன்முறை ஏற்பட   அடிப்படைக் காரணம் இருந்தது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறான காரணங்கள் அனைத்தும் புதிய அரசியல் சாசனத்தின் மூலம் களையப்பட வேண்டும்.

அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடியதும் மதிக்கத்தக்கதுமான தங்களுடைய தேசம், தங்களுடைய அரசியல் சாசனம் என்று பெருமை கொள்ளும் வகையில் நாட்டின் முதன்மைச் சட்டமாகிய அரசியல் சாசனம் அமைய வேண்டும்.
ந}ட்டில் முன்னேற்றமும் நல்லிணக்கமும் உடனடியாக ஏற்படாதபோதும், அவை  படிப்படியாக ஏற்பட்டு வருகின்றன. 

இனிவரும் காலம் முக்கியமான முன்னேற்றங்களும் மாற்றங்களும் இடம்பெறக்கூடிய காலமாக அமையும்.
மேலும், கல்வித்துறையைப் பொறுத்தவரையில் கடந்த காலத்தில்; மத்திய அரசங்கத்தால் ஒதுக்கப்பட்ட நிதி போதுமானதாக இருக்கவில்லை. இந்த வருடம் இதற்கான  நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது' எனவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .