2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

'திருமலை மத்திய சந்தையில் வாகனத் தரிப்பிடத்திற்கு கட்டணம் இல்லை'

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 29 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை மத்திய பொதுச்சந்தையில் வாகனத் தரிப்பிடத்திற்கு கட்டணம் அறவிடப்படமாட்டாது. ஆனால், சிலர் அநாகரிகமானவர்களுக்கு வக்காலத்து வேண்டி வாகனத் தரிப்பிடத்தில் கட்டணம் அறவிடுவதற்கு துணைபுரிகின்றனர். இதனால் வரியிறுப்பாளர்கள்  அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர்.


இவ்வாறு திருகோணமலை நகரசபைத் தலைவர் க.செல்வரசா தெரிவித்தார்.


திருகோணமலை ஊடக இல்லத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.


அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

நகரசபை, நிர்வாகத்தை சரியாக செய்ய முடியாத நிலைமையுள்ளது. சக்திக்கு மீறிய செயற்பாடுகளால் எம்மால் சரிவர சேவைகளை ஆற்றமுடியாதுள்ளது. திருகோணேஸ்வரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கடைகளை அகற்ற முற்பட்டபோதிலும்,   எமது சக்திக்கு மீறியோர் தலையிட்டதால் அதனை அகற்ற முடியாதுபோனது.  

கன்னியா பகுதியிலுள்ள நகரசபைக்கு சொந்தமான திண்மக்  கழிவகற்றும் இடத்தில் தனியார் நிறுவனங்களும் பாதுகாப்பு படையினரும் அனுமதியின்றி திண்மக்கழிவுகளை அகற்றி வருகின்றனர். இதனால் அவ்விடத்தில் பல சிக்கல்கள் தோன்றியுள்ளன.
பொதுச்சந்தையில் முச்சக்கரவண்டி நிலையமொன்று அனுமதியின்றி  இயங்குகிறது. இதனையும் எம்மால் அகற்ற முடியாதுள்ளது. இதனை அகற்ற நாம் முனைந்தபோது வணக்கத்திற்குரியவர்களும் கௌரவத்திற்குரியவர்களும் தலையிடுகின்றனர்.

மேலும் பொதுச்சந்தையில் குறைந்த விலைக்கு கடைகளைப் பெற்றுக்கொண்ட வியாபாரிகள் வேறு நபர்களுக்கு அதிக விலையில்  இக்கடைகளை கொடுத்துள்ளமை தெரியவந்துள்ளது. அங்கு அமைக்கப்பட்ட கடைகளின் எண்ணிக்கையைக் காட்டிலும், அதிகளவான வியாபாரிகள் வியாபார  நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். மேல்மாடியில் அமைக்கப்பட்ட கடைகள் குறைவாகவுள்ளதால் தரைதளத்திலுள்ள கடைகளுக்கு முன்பாக பொருட்களை போட்டு விற்பனை நடைபெறுகின்றன.
இவைகள் அகற்றப்பட்டால் எதிர்காலத்தில் எம்மால் நடவடிக்கை எடுக்கப்படும்.

எமது நிர்வாகப் பிரிவில் 944 பேர் டெங்கினால் பீடிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 11 பேர் மரணமடைந்துள்ளனர். இந்நிலையில், டிசம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் 7ஆம் திகதி வரை டெங்கொழிப் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.  
இச்சந்திப்பில் நகரசபை உறுப்பினர்களான நூர்முஹம்மது, க.அருட்செல்வம், சி.கரிகாலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .