
-கஜன்
பாடசாலை ஆசிரியர்கள் தனித்த வகுப்பறை கற்பித்தலோடு மாத்திரம் நின்றுவிடக்கூடாது. நேரத்திற்கு வகுப்புச் சென்று கற்பிக்கும் ஆசிரியர்களும் நல்லாசிரியர்களாக இருக்க முடியாது. மாணவர்களை சிறந்த பண்புள்ளவர்களாக மாற்றக் கூடிய நிலையினைக் கொண்டவர்களே சிறந்த ஆசிரியர்களாவர். இவ்வாறு கிழக்கு மாகாணசபை எதிர்கட்சித் தலைவரும் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியின் முன்னாள் அதிபரும், முன்னாள் கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளரும், கிழக்கு மாகாண கல்வி, பண்பாடு, காணி, போக்குவரத்து அமைச்சின் பிரதிச் செயலாளருமான சி.தண்டாயுதபாணி தெரிவித்தார்.
ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் அதிபராக இருந்து ஓய்வுபெற்ற இரத்தினம் புவனேந்திரனின் சேவை நலன் பாராட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இவர் 27 வருடங்கள் இக்கல்லூரியில் ஆசிரியராகவும் பகுதி தலைவராகவும், உதவி அதிபராகவும், பிரதி அதிபராகவும், அதிபராகவும் கல்வி சேவையாற்றி ஓய்வு பெற்றுள்ளார். ஓய்வுபெற்ற அதிபரின் பிரியாவிடை வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே தண்டாயுதபாணி மேற்கண்டவாறு தெரிவித்தார்.