2025 ஜூன் 26, வியாழக்கிழமை

புத்த விகாரை அமைப்பதை தடுத்து நிறுத்துமாறு வேண்டுகோள்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 02 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், வடிவேல்-சக்திவேல்

திருகோணமலை, மாவட்டத்தின் கன்னியாவில் உள்ள தனியார் காணியில் புத்த விகாரை அமைப்பதை தடுத்து நிறுத்துமாறுகோரி திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபருக்கு இந்து இளைஞர் பேரவை தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் அவசர மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அவர் அனுப்பி வைத்துள்ள மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

'திருகோணமலை மாவட்டத்தின் பட்டினமும் சூழல் பிரதேசத்தில் இந்துக்களின் புனித வழிபாட்டுத் தலமும், தீர்த்தமுமாக இருந்த கன்னியா வெந்நீர் ஊற்றில் திட்டமிட்டு அமைக்கப்பட்ட பௌத்த விகாரையை தொடர்ந்து அதன் அருகில் உள்ள (400 மீற்றருக்கு அப்பால்) தனியார் காணியில் தர்மம் பெற்று வாழ்ந்த பிக்குவால் மூன்று புத்தர் சிலைகள் தாபிக்கப்படவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளன.

'யுத்தத்தின் பின் இந்துக் கோயில்கள் உடைக்கப்பட்டமை, அவ்விடங்களில் புத்த விகாரை தாபிக்கப்பட்டமை ஆகிய இந்து மதத்தை அவமதிக்கும் செயற்பாடுகள் தங்களது திருகோணமலை மாவட்டத்திலேயே இடம்பெற்றுள்ளன.

அரசாங்கத்தின் மதவிவகார பிரதியமைச்சர் உள்ள மாவட்டத்தில் இச்சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெறுவது இந்துக்களின் மத உரிமைகளை திட்டமிட்டு பாதிக்கச் செய்யும் நடவடிக்கையாகவும் உள்ளது.
தற்போது தனியார் காணியில் இடம்பெறவுள்ள புத்த விகாரை தாபிப்பை யாரும் அனுமதிக்க முடியாது.

கௌதம புத்த பகவானின் தர்ம உபதேசங்களை கொச்சைப்படுத்தும் விதத்தில் ஏனைய மத மக்களின் மனங்களை புண்படுத்தும் செயல்களை சில பௌத்த மத துறவிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

எனவே திருகோணமலை மாவட்டத்தின் அரச அதிபர் என்ற வகையில் கன்னியா வெந்நீர் ஊற்றுப் பகுதியில் 400 மீற்றருக்கு அப்பால் பௌத்த பிக்கு ஒருவரால் தனியார் காணியில் தாபிக்க உள்ள பௌத்த விகாரை செயற்பாட்டை தடுத்து நிறுத்துமாறு அன்பாக வேண்டுகின்றேன்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரதிகள் மதவிவகார அமைச்சர், கிழக்கு மாகாண முதலமைச்சர், கொழும்பு இந்து சமய கலாசார அலுவல்கள் பணிப்பாளர், திருகோணமலை மாவட்ட பிரதேச செயலாளர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .