2025 ஜூன் 25, புதன்கிழமை

தமிழ் - முஸ்லிம் மக்களின் நல்லுறவை சீர்குலைக்க முயற்சி

Kogilavani   / 2014 மே 14 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

'திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் - முஸ்லிம் மக்களின் நல்லுறவை சீர் குழைப்பதற்கு சில தமிழ் அதிகாரிகள் முயற்சிப்பது மிகவும் கவலைக்குரியது' என கிழக்கு மாகாண சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி முக்கியஸ்தர்களுடனான சந்திப்பொன்று செவ்வாய்க்கிழமை கிண்ணியாவில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

திருகோணமலை மாவட்டத்தின் சில பிரதேச செயலகங்களில் உள்ள தமிழ் அதிகாரிகளும், மாவட்ட மட்ட சில தமிழ் அதிகாரிகளும் முஸ்லிம் மக்களின் நியாயமான உரிமைகளை மறுதலித்து மூடி மறைக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்கள் வந்து கொண்டிருக்கின்றன.

முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம், புனர்வாழ்வுச் செயற்பாடுகள், காணி தொடர்பான விடயங்களில் பிழையான தகவல்களை உத்தியோகபூர்வமாக வழங்கி அவர்களுக்கான உரிமைகள் கிடைப்பதற்கு தமிழ் அதிகாரிகள் தடையேற்படுத்தி வருவதாக முஸ்லிம் மக்கள் மத்தியில் பரவலான கருத்துக்கள் உள்ளன.

கடந்த மாதம் நடைபெற்ற திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் இடம்பெற்ற ஒரு சம்பவமும் இதற்கு வலுச்சேர்ப்பதாகவே உள்ளது. இவை ஆரோக்கியமான செயற்பாடுகளல்ல என்பதை இந்த அதிகாரிகள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

புலிகளின் பயங்கரவாத காலத்தில் பல்வேறு கசப்பான சம்பங்களை அனுபவித்து வந்த இவ்விரு சமூகமும் தற்போதுதான் மீண்டும் ஒற்றுமைப்பட ஆரம்பித்துள்ளது. இவ்வேளையில் இந்த அதிகாரிகளின் செயற்பாடுகள் சமூகங்களிடையே மீண்டும் விரிசலை விரிவாக்கும் ஆபத்தை ஏற்படுத்துகின்றது.

முன்பு அரசியல்வாதிகள்தான் தமது சுயதேவைக்காக தமிழ் - முஸ்லிம் மக்களை பிரித்து வந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு வந்தது. இன்று  அரசியல்வாதிகளிடையே பெரும்பாலும் புரிந்துணர்வு ஏற்பட்டு வரும் வேளையில் அதிகாரிகளின் செயற்பாடு மிகவும் கவலையைத் தருகின்றது.

இனப்பிரச்சினைக்கான தீர்வு பின்தள்ளிப் போனமைக்கு தமிழ் முஸ்லிம் மக்களிடையே உள்ள இடைவெளியும் முக்கிய காரணிகளுள் ஒன்றாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதால் தான் தமிழ் - முஸ்லிம் ஐக்கியம் பற்றிய குரல் இன்று மேலோங்கியுள்ளது. இந் நிலையில் இவ்வாறானதொரு சூழ்நிலை ஏற்படுவது மிகவும் துரதிஷ்டவசமானது.

முஸ்லிம் மக்களுக்கு சலுகைகள் வழங்காவிட்டாலும் பரவாயில்லை அவர்களது நியாயமான உரிமைகள் விடயத்தில் நியாயமாக நடந்து கொள்ள வேண்டியது தமிழ் அதிகாரிகள் மீதுள்ள தார்மீகக் கடமையாகும்' என அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .