2025 ஜூன் 25, புதன்கிழமை

தகவல் தொழில்நுட்ப நிலையங்கள் ஸ்தாபிப்பதில் பாகுபாடு: எம்.அனஸ்

Kogilavani   / 2014 ஜூலை 08 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

திருகோணமலை மாவட்டத்தில் மஹிந்தோதைய தகவல் தொழில்நுட்ப நிலையங்கள் பாகுபாட்டின் அடிப்படையில்  ஸ்தாபிக்கப்பட்டுள்ளதா என்ற  சந்தேகம்  வலுத்துள்ளதாக இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் தேசியத் தலைவர் எம்.அனஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

2012 ஜூன் முதலாம் திகதி புள்ளிவிபரத் தகவல்களின்படி, திருகோணமலை மாவட்டத்தில் 116 முஸ்லிம் பாடசாலைகளும் 100 தமிழ்ப் பாடசாலைகளும் 77 சிங்களப் பாடசாலைகளுமாக மொத்தம் 293 பாடசாலைகள் இருக்கின்றன.

திருகோணமலை, கந்தளாய், மூதூர், கிண்ணியா, திருகோணமலை வடக்கு என 5 கல்வி வலயங்களும் இம்மாவட்டத்தில் உள்ளன.   

நவீன யுகத்திற்கேற்ப கல்வித் துறையை மேம்படுத்தும் வகையில் நாடளாவிய ரீதியில் 250 தொழில்நுட்ப பீடங்களை புதிதாக உருவாக்கும் அரசாங்கத்தின் கருத்திட்டம் கடந்த 2 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கொழும்பு லும்பினி வித்தியாலயத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

2000 கோடி ரூபா செலவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இந்த செயற்திட்டத்தின் முதலாம் கட்டம் நாட்டின் 9 மாகாணங்களிலும் அதே தினத்தன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்ட கந்தளாய் கல்வி வலயத்தில் அபேபுர பெண்கள் கல்லூரி, கந்தளாய் மத்திய கல்லூரி, அக்போபுர மகா வித்தியாலயம் ஆகிய மூன்று சிங்களப் பாடசாலைகளிலும் திருகோணமலை கல்வி வலயத்தில் விபுலானந்த மகா வித்தியாலயம், மூதூர் கல்வி வலயத்தில் மூதூர் மத்திய கல்லூரி என்பவற்றிலும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை வடக்கு மற்றும் கிண்ணியா கல்வி வலயங்களில் எந்தவொரு பாடசாலையும் தெரிவுசெய்யப்படாத நிலையில் 77 சிங்களப் பாடசாலைகளை மட்டும் கொண்டுள்ள கந்தளாய் கல்வி  வலயத்தில் இருந்து மாத்திரம் மூன்று சிங்களப் பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

அதாவது 26 சிங்களப் பாடசாலைகளுக்கு ஒன்று என்ற அடிப்படையில் இத்தெரிவு இடம்பெற்றுள்ளது. இதேவேளை, 100 தமிழ்ப் பாடசாலைகளுக்காக திருகோணமலை கல்வி வலயத்திலிருந்து ஒருபாடசாலையும் 116 முஸ்லிம் பாடசாலைகளுக்காக மூதூர் கல்வி வலயத்திலிருந்து ஒருபாடசாலையும் தெரிவாகியுள்ளன.

இது தெளிவான புறக்கணிப்பின் வெளிப்படையான அடையாளமாகும் என இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் தேசியத் தலைவர் எம்.அனஸ் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .