2025 ஜூன் 25, புதன்கிழமை

ஐ.தே.க. சிறுபான்மையின மக்களையும் அரவணைத்துசெல்கின்றது: இம்ரான்

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 01 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.அப்துல் பரீத்

'எவ்வித பாகுபாடுமின்றி சிறுபான்மை இன மக்களையும் அரவணைத்துச் செல்லும் ஒரே கட்சி ஐக்கிய தேசியக் கட்சிதான்' என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

தனது நிதி ஒதுக்கீட்டில் கொள்வனவு செய்யப்பட்ட தளபாடங்களை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு  வியாழக்கிழமை(31) வெருகல் வட்டவான் ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்;ந்தும் உரையாற்றிய அவர்,

'இலங்கை ஒரு அழகியநாடு, வளங்கள் நிறைந்த நாடு, வரலாற்றுக்காலம் முதல் இங்கு சகல இன மக்களும் ஒற்றுமையோடு வாழ்ந்து வந்திருக்கிறார்கள். நாட்டின் சுதந்திரத்திற்காகவும், இறைமைக்காகவும் எல்லா இன மக்களும் ஒன்று சேர்ந்ததே பாடுபட்;டார்கள்.

இந்த உண்மையை ஐக்கிய தேசியக் கட்சி நன்கு உணர்ந்திருந்தது. அதனால் சுதந்திர இலங்கையில் ஆட்சியமைத்த முதல் கட்சி என்ற வகையில் எல்லா இன மக்களையும் அரவணைத்துச் செல்லும் நிலைப்பாட்டில் இந்நாட்டை அது வழிநடத்தியது.

அதற்கடுத்து ஆட்சிக்கு வந்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சிறுபான்மையினர் நாட்டுக்குச் செய்த பங்களிப்புகளை மறந்து அவர்களை முற்றாக ஒதுக்கித் தள்ளியது.

அதன் பிரதிலிப்புத்தான் அக்கட்சியால் 1958ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தனிச் சிங்களச்சட்ட அமுலாக்கம். இந்நாட்டில் தமிழ்மொழியும் இருக்க முடியாது. தமிழ்ப் பேசுவோரும் இருக்க முடியாது என்ற அர்த்தத்திலேயே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அது இன்றைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியிலும் தொடர்கிறது. கோயில், பள்ளிவாயல், தேவாலயம் தாக்கப்படுகின்றது.

சிறுபான்மையினரின் காணிகள் அபகரிக்கப்படுகின்றன. தமிழ் மொழி அமுலாக்கத்தில் பாரபட்சம். சிறுபான்மைக்கு வழங்கப்படும் வாக்குறுதிகள் காற்றில் பறக்க விடப்படுகின்றன. சிறுபான்மையினருக்கு இழைக்கப்படும் அநீதிகள் எல்லாம் சின்ன விடயம். அதை ஏன் பெரிது படுத்துகிறீர்கள் என்று நாட்டு தலைமைத்துவம் கேட்கிறது.

இதுபோன்ற கேவலமான நிலை ஐக்கிய தேசியக் கட்சியில் இல்லை. அது எல்லா விடயங்களிலும் சிறுபான்மையினரைக் கௌரவப் படுத்தியது. அதனால் தான் இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மத விவகார அமைச்சைக் கூட உருவாக்கியது. அதன் மூலம் சகலரினதும் சமய கலாசார விடயங்கள் சுதந்திரமாகக் கையாளப்பட்டன.

இன்று இந்த அமைச்சுக்கள் ஒழிக்கப்பட்டு விட்டன. ஆனால் புத்தசாசன அமைச்சு உள்ளது. இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ விவகார திணைக்களங்களுக்குரிய அமைச்சரும், பிரதியமைச்சரும் பௌத்தர்கள். இந்த அரசு சிறுபான்மையினருக்கு கொடுக்கின்ற மரியாதையின் அளவு இவ்வளவு தான்.

எனவே, மானமுள்ள எந்த ஒரு சிறுபான்மையினத்தவரும் இந்த அரசாங்கத்துக்கு வாக்களிக்க மாட்டார்கள். வாக்களிக்கவும் கூடாது. மிக விரைவாக இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் செயற்பாடுகளை நாம் முன்னெடுக்க வேண்டும். அப்போதுதான் நாமும் நமது சந்ததியினரும் நிம்மதியாக வாழும் சூழ்நிலை உருவாகும்' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .