2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

'சிறுவர்கள் உரிமைகளோடு வாழும் சூழலை ஏற்படுத்தியர் ஜனாதிபதி'

Kogilavani   / 2014 ஒக்டோபர் 15 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஒலுமுதீன் கியாஸ்


'கடந்த 30 வருடங்களாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தோளில் துப்பாக்கியை சுமந்து கொண்டு உயிரைப் பலி கொடுத்த தமிழ் சிறுவர்களை பதுகாத்து அவர்கள் உரிமைகளோடு வாழும் சூழலை இந்த நாட்டில் ஏற்படுத்திய முதல் மனிதர் ஒருவர் இந்த நாட்டில் இருக்கிறார் என்றால் அது மஹிந்த ராஜபக்ஷதான் என்பதை யாரும் மறுக்க முடியாது' என்று கிழக்கு மாகாண சுகாதார, சிறுவர் நன்னடத்தை, பராமரிப்பு அமைச்சர் எம்.ஐ.மன்சூர் தெரிவித்தார்.

கிண்ணியா மத்திய கல்லூரியில் செவ்வாய்க்கிழமை(15) நடைபெற்ற கிழக்கு மாகாண சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் உள்ள சிறார்களை கௌரவப்படுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,  

'யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்திருக்காவிட்டால் இன்று பலரை நாங்கள் தொலைத்திருப்போம். எனவே சமாதானத்தை ஏற்படுத்தி சிறுவர்களைப் பாதுகாத்த ஜனாதிபதியை நாம் மறந்து விட முடியாது.

நவீன தொழில்நுட்ப யுகம் மனிதனை வேகமாக வாழ வைக்கின்ற அதேவேளை சிறார்களை வேகமாக வழிகெடுக்கின்ற வேலையையும் செய்கின்றது. சிறுவர்களைப் பற்றி சிந்திப்பதற்கு ஒக்டோபர் 1 ஆம் திகதி மட்டும் போதாது. வருடம் முழுவதுமாக சிந்திக்க வேண்டிய தேவை எழுந்திருக்கிறது.

இதன் காரணமாக வன்முறையற்ற சூழலில் வளமோடு சிறார்களை வாழ்ந்திடச் செய்வோம் என்ற தொனிப் பொருளில் கிழக்கு மாகாணத்தில் கொண்டாடுகின்றோம்.

சிறுவர்கள ;தாம் தேசத்தின் பங்காளர்கள். நாங்கள் கனவு காண்கின்ற தேசத்தை அலங்கரிக்கப் போகின்றவர்கள்.

இன்று பிள்ளைகளுக்கு சொந்த வீட்டிலே அச்சுறுத்தல். சிலவேளை பாடசாலைகளிலே அச்சுறுத்தல். அயலவர்களினால் அச்சுறுத்தல். மிக நெருங்கிய உறவினர்களால் அச்சுறுத்தல். இந்த சந்தர்பத்தில் சிறுவர்களைப் பாதுகாப்பதற்கு சகல சட்ட விதிகளையும் வழுக்கட்டாயமாக அமுல்படுத்துவதற்கு கிழக்கு மாகாண திணைக்களம் சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது.

யுத்தத்தினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் திருகோணமலையும் ஒன்றாகும். யுத்தத்தால் கல்வி கற்கும் உரிமையை சிறார்கள் இழந்திருந்தார்கள். யுத்த காலத்தில் போதுமான ஆசிரியர்கள் இங்கிருக்கவில்லை. இன்று ஆசிரியர் நியமனங்களை கிராமப்புற பாடசாலைகளுக்கும் கொண்டு சென்றிருக்கிறோம். இதன் காரணமாக கல்வியில் வளர்ச்சி காணுகின்ற ஒரு மாவட்டமாக  திருகோணமலை திகழ்கின்றது.

சிறுவர் உரிமையையும் முதியோருடைய பெறுமதியையும் நாம் சிந்திக்க வேண்டியிருக்கின்றது. இதன்மூலம் ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் சாசனம் உருவாவதற்கு பல வருடங்களுக்கு முன்பே சிறுவர் உரிமை பற்றி இஸ்லாம் கூறிவிட்டது.

எனவே சிறுவர்களின் பாதுகாவலர்களாக நாம் எல்லோரும் மாற வேண்டும். அவர்களுக்கு இருக்கின்ற முக்கியமான அனைத்து உரிமைகளையும் நாம் வழங்க முன்வர வேண்டும்' என்று கூறினார்.

இந்த வைபவத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் றியல் அட்மிரல் மொஹான் விஜேவிக்கிரம, முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, மாகாண சபை உறுப்பினர் முகம்மது லாஹிர், கிழக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு தினைக்கள ஆணையாளர் திவாகர சர்மா, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ரீ.எம்.எஸ்.அபேகுணவர்த்தன, கிண்ணியா நகரசபைத் தலைவர் எம்.எம்.ஹில்மி, கிண்ணியா பிரதேச சபைத் தலைவர் எஸ்.எல்.எம்.ஜவாதுள்ளா உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .