2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

சிறுவனைப் பலிகொடுத்து புதையல் தோண்ட முயற்சி: 9 பேருக்கும் விளக்கமறியல்

Editorial   / 2026 ஏப்ரல் 13 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராஜா சரவணன்

  மட்டக்களப்பு, மண்முனைப் பகுதியில் 16 வயது சிறுவன் ஒருவரைப் பலிகொடுத்து புதையல் தோண்ட முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட மொரட்டுவ பிரதேச செயலகத்தின் பிரதம கணக்காளர் மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் உள்ளிட்ட 9 பேரையும் வரும் மார்ச் 20-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சம்பவத்தின் பின்னணி:

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்முனை பிரதான வீதியிலுள்ள ஆலயம் ஒன்றிற்கு அருகாமையில் உள்ள காணியில் குழுவொன்று புதையல் தோண்டுவதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கடந்த மார்ச் 31-ஆம் திகதி இரவு, இரகசியத் தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், அங்கு புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்டிருந்த மொரட்டுவ பிரதேச செயலகத்தின் பிரதம கணக்காளர், ஓய்வுபெற்ற இராணுவ வீரர் மற்றும் மொரட்டுவ, கட்டுகஸ்தோட்டை, இங்கிரிய போன்ற பகுதிகளைச் சேர்ந்த 9 பேரைக் கைது செய்தனர். அத்துடன் அங்கிருந்த பூஜை பொருட்களையும் கைப்பற்றி காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

நீதிமன்ற விசாரணை:

கைது செய்யப்பட்டவர்கள் கடந்த முதலாம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, குறித்த கும்பலால் அழைத்து வரப்பட்ட 16 வயது சிறுவன் தொடர்பில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின:

  • சிறுவன் தரப்பு வாதம்: குறித்த சிறுவன் பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்தவர் என்றும், மூன்று தலைமுறைகளில் பிறந்த முதல் ஆண் பிள்ளை மற்றும் அபூர்வமான மூன்று நட்சத்திரங்கள் ஒரே நேரத்தில் உச்சத்தில் இருந்தபோது பிறந்தவர் என்பதால், அவரைப் பலிகொடுப்பதற்காகவே அழைத்து வந்ததாகச் சிறுவன் தரப்பு சட்டத்தரணி வாதிட்டார்.
  • எதிர்தரப்பு வாதம்: புதையல் தோண்டியவர்கள் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி, இச்சிறுவன் நிலத்தடியில் புதையல் இருக்குமிடத்தை 'மை' போட்டுத் துல்லியமாகப் பார்க்கும் திறனுடைய ஒரு மந்திரவாதி என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதவான், சிறுவனைச் சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு இல்லத்தில் வைக்குமாறும், ஏனையோரை மார்ச் 10 வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.

தொடரும் விளக்கமறியல்:

இவ்வழக்கு நேற்று வெள்ளிக்கிழமை (10) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேக நபர்கள் 9 பேரையும் வரும் 20-ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார். சிறுவன் தொடர்ந்து நன்னடத்தை இல்லத்தின் பராமரிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

வரலாற்றுப் பின்னணி:

சம்பவம் நடைபெற்ற மண்முனைப் பகுதியானது சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சோழர் ஆட்சிக் காலத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாக இருந்துள்ளது. சோழ குலத்தைச் சேர்ந்த நாச்சியார் என்பவர் மண்முனையை மையமாகக் கொண்டு 'நெல்லிக்குளம்' எனும் குளத்தை அமைத்து ஆட்சி செய்ததாகக் கூறப்படுகிறது. இத்தகைய வரலாற்றுச் சுவடுகள் நிறைந்த பகுதிகளில் திட்டமிட்டுப் புதையல் தோண்டுவது, தமிழ் மன்னர்களின் தொல்பொருள் சான்றுகளை அழிக்கும் செயலாக அமையும் எனச் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .