2026 ஏப்ரல் 24, வெள்ளிக்கிழமை

வெள்ளரிப்பழ விற்பனை அமோகம்

Editorial   / 2026 ஏப்ரல் 24 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 பாறுக் ஷிஹான்

அம்பாறை மாவட்டத்தில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, கரையோரப் பகுதிகளில் பிரதான வீதியோரங்களில் வெள்ளரிப்பழம் உள்ளிட்ட பழவகைகளின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகின்றது.

குறிப்பாகச் சம்மாந்துறை - அம்பாறை பிரதான வீதி, கல்முனை - அக்கரைப்பற்று பிரதான வீதியோரங்களில் வியாபாரிகள் துவிச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளில் வெள்ளரிப்பழங்களைக் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். தற்போது நிலவி வரும் கடும் வெப்பத்தினால் ஏற்படும் உடல் உஷ்ணத்தைத் தணிப்பதற்காக, பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வெள்ளரிப்பழம் மற்றும் ஏனைய பழவகைகளைக் கொள்வனவு செய்வதை அவதானிக்க முடிகின்றது.

 வெளிமாவட்டங்களிலிருந்து அம்பாறை மாவட்டத்திற்குக் கொண்டு வரப்படும் பழங்களின் தரத்தைப் பரிசோதிக்குமாறு, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சஹீலா இஸ்ஸடீன் வழங்கிய ஆலோசனைக்கு இணங்க, சுகாதாரப் பரிசோதகர்கள் தினமும் விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

  வெப்பமான காலநிலை காரணமாக வெள்ளரிப்பழத்திற்கு அதிக கேள்வி   ஏற்பட்டுள்ளது. சந்தையில் சிறியது முதல் பெரியது வரையான பழங்கள் அவற்றின் பருமனுக்கேற்ப 150 ரூபாய் முதல் 650 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன. இப்பழவகையானது பெரும்பாலும் வெப்பமான காலங்களிலேயே அதிகளவில் அறுவடை செய்யப்படுகின்றது. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான்குளம், செங்கலடி, களுதாவளை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் வெள்ளரிப் பயிர்ச்செய்கை பண்ணப்பட்டு, அங்கிருந்து ஏனைய ஊர்களுக்கு விற்பனைக்காகக் கொண்டு செல்லப்படுகின்றது.

  இதேவேளை, ‘டிட்வா’ சூறாவளி மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட மோசமான காலநிலை மாற்றங்களினால் இம்முறை வெள்ளரிச் செய்கை பாதிக்கப்பட்டதாகவும், பயிர்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட விவசாயிகள்   தமது கவலையைத் தெரிவித்தனர்.

தற்போது நிலவும் வெப்பத்தைத் தணிக்கப் பொதுமக்கள் வெள்ளரிப்பழம் மட்டுமன்றி தர்பூசணி (வர்த்தகப் பழம்), இளநீர், தோடை, திராட்சை மற்றும் ஏனைய குளிர்பான விற்பனை நிலையங்களை அதிகளவில் நாடிச் செல்வதையும் காணக்கூடியதாக உள்ளது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .