2026 ஏப்ரல் 18, சனிக்கிழமை

'அணியிலிருந்து நீக்கப்பட்டாலும் ஓய்வு பெறேன்'

Shanmugan Murugavel   / 2016 ஒக்டோபர் 11 , பி.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து அணிக்கும் ஸ்லோவேனிய அணிக்குமிடையில் இன்று இடம்பெறவுள்ள உலகக் கிண்ணத் தகுதிகாண் போட்டிக்கான இங்கிலாந்துக் குழாமிலிருந்து நீக்கப்பட்ட அவ்வணியின் தலைவர் வெய்ன் றூணி, சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறப் போவதில்லையெனத் தெரிவித்துள்ளார்.

குழாமிலிருந்து அவர் நீக்கப்படும் முடிவு, போட்டிக்கு முன்பதாகவே அறிவிக்கப்பட்ட நிலையில், அது தொடர்பாக அவர் கருத்துத் தெரிவித்தார்.

மன்செஸ்டர் யுனைட்டெட்டின் இறுதி 3 போட்டிகளிலும், முதலாவதாகக் களமிறங்கும் 11 பேரில் ஒருவராகக் களமிறக்கப்படாத றூணி, கடினமான தருணத்தை எதிர்கொள்வதாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்த றூணி, "நான், எதிர்கொள்ள வேண்டிய ஒரு விடயம் இதுவாகும். இதை எதிர்கொள்ளுமளவுக்கு, நான் வளர்ந்தவன். இதிலிருந்து, என்னால் மீண்டு வர முடியுமென நான் நினைக்கிறேன். எனக்கு 30 வயதே ஆகிறது. 'இதிலிருந்து மீண்டு வர முடியுமா?' எனக் கேட்பதற்கு, எனக்கு 35 அல்லது 36 வயது கிடையாது. தொடர்ந்தும் நான், கடினமாக உழைப்பேன். நான் ஏற்கெனவே சொன்னதைப் போன்று, இங்கிலாந்துக்காக விளையாடுவதிலிருந்து நான் நிறுத்த மாட்டேன்" என்றார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், "இப்பருவகாலத்தின் பின்னர், 'அவ்வளவும் தான். எனக்குப் போதும்' என்று சொல்லிவிட்டு, விடைபெற்றுப் போவது, இலகுவாக இருந்திருக்கும். ஆனால், நான் அப்படியன்று. இன்னும் பங்களிப்பை வழங்க முடியுமென நான் நினைக்கிறேன். அதை நான் [முகாமையாளரிடம்] தெளிவுபடுத்தியுள்ளேன். நிச்சயமாக, ரஷ்யாவில் இடம்பெறவுள்ள உலகக் கிண்ணம் வரை. அது தான் எனக்கு வேண்டும்" என்று குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .