2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

‘தெவேத்தியாவின் பந்துவீச்சு முக்கியமானது’

Gopikrishna Kanagalingam   / 2017 மே 10 , பி.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக் போட்டிகளில், கிங்ஸ் லெவிண் பஞ்சாப் அணிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற போட்டியில், பஞ்சாப் அணி வெற்றிபெறுவதற்கு, இளைய வீரரான ராகுல் தெவேத்தியாவின் பந்துவீச்சு, முக்கிய காரணமாக அமைந்தது என, அவ்வணியின் வேகப்பந்து வீச்சாளர் மோகித் ஷர்மா தெரிவித்துள்ளார்.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி, கிளென் மக்ஸ்வெல்லின் 44 (25), ரிதிமான் சகாவின் 38 (33) ஓட்டங்களின் துணையோடு, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 167 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலளித்தாடிய கொல்கத்தா அணி, 6 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ஓட்டங்களுடன் பலமான நிலையில் காணப்பட்டது. அப்போது பந்துவீச வந்த ராகுல் தெவேத்தியா, 4 ஓவர்களில் 18 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து, 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கிறிஸ் லின்னின் 84 (52) ஓட்டங்களுக்கு மத்தியில், கொல்கத்தா அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 153 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. தெவேத்தியா தவிர, மோகித் ஷர்மா 3 ஓவர்களில் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்த மோகித் ஷர்மா, “மத்திய ஓவர்களில் எங்களது பந்துவீச்சாளர்கள் பந்துவீசிய விதம் சிறப்பானது. இந்தப் பருவகாலத்தில், தெவேத்தியாவின் முதலாவது போட்டி இது. ஏனைய பருவகாலங்களில் அவர், அதிகமான போட்டிகளில் விளையாடியிருக்கவில்லை. அவரது பந்துவீச்சே, திருப்புமுனையாக இருந்தது” என்று தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .