2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

‘போர்மியுலா வண் பந்தயத்தை நடத்த சிங்கப்பூர் விரும்பவில்லை’

Shanmugan Murugavel   / 2016 நவம்பர் 21 , பி.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

வருடாந்த போர்மியுலா வண் கிரான்ட் பிறிக்ஸ் பந்தயத்தை நடாத்த சிங்கப்பூர் விரும்பவில்லை என, ஜேர்மனிய சஞ்சிகையான ஓட்டோ மோட்டர் உன்ட் ஸ்போர்ட்டுக்கு போர்மியுலா வண்ணின் பிரதம நிறைவேற்றதிகாரியான பேர்ணி அக்கில்ஸ்டோன் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் இவ்வாண்டு செப்டெம்பர் மாதம் இடம்பெற்ற பந்தயத்தில், பார்வையாளர்களின் வரவில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க வீழ்ச்சியினைத் தொடர்ந்தே, அக்கில்ஸ்டோனின் மேற்கூறப்பட்ட கருத்துக்கள் வெளியாகியுள்ளன. இம்முறை, மூன்று நாட்களிலும் சராசரியாக 73,000 வருகையளித்தனர். கடந்த வருடம் இத்தொகையானது 87,000 ஆக இருந்ததுடன், சிங்கப்பூரில் போர்மியுலா வண் அறிமுகமான 2008ஆம் ஆண்டு 100,000க்கு மேற்பட்ட பார்வையாளர்கள் தினமும் வருகையளித்தனர்.

இந்நிலையில், கருத்துத் தெரிவித்துள்ள சிங்கப்பூரில் பந்தயத்தை நடத்துகின்ற சிங்கப்பூர் கிரான்ட் பிறிக்ஸின் பேச்சாளர் பெண்மணியொருவர், தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற வியாபாரப் பேச்சுவார்த்தைகளில் தாங்கள் கருத்துத் தெரிவிப்பதில்லை எனக் கூறியுள்ளார். போர்மியுலா வண்ணுடனான புதிய ஒப்பந்தத்தை சிங்கப்பூர் அடையாவிட்டால், அடுத்த வருடம் இடம்பெறும் பந்தயமே, சிங்கப்பூரில் இடம்பெறும் இறுதிப் பந்தயமாக இருக்கும்.

இதேவேளை, குறைவடையும் பற்றுச்சீட்டுக்கள் விற்பனை காரணமாக, ஒப்பந்தம் முடிவடையும் 2018ஆம் ஆண்டிலிருந்து போர்மியுலா வண் கிரான்ட் பிறிக்ஸ் பந்தயத்திலிருந்து விலகுவது குறித்து மலேஷியாவும் கருத்திற் கொள்கையில், தென் கிழக்காசியாவில் போர்மியுலா வண்ணின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .