2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

2 பிரிவு டெஸ்ட்டை இலங்கை எதிர்க்கிறது

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 07 , மு.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

டெஸ்ட் போட்டிகளை இரண்டு பிரிவாகப் பிரித்து நடத்துவதற்கான முன்மொழிவை, இலங்கை கிரிக்கெட் சபை எதிர்த்துள்ளதாக, அச்சபையின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் தரப்படுத்தலில் முதல் 7 இடங்களிலுள்ள அணிகள் முதற்பிரிவிலும், 5 அணிகள் அடுத்த பிரிவிலும் விளையாடுவதற்கான முன்மொழிவு குறித்து, சர்வதேச கிரிக்கெட் சபையின் அண்மைய கூட்டத்தொடரில் ஆராயப்பட்டது.

இதற்கு, பங்களாதேஷ் கிரிக்கெட் சபை மாத்திரமே எதிர்ப்புத் தெரிவித்ததாக, முன்னர் தெரிவிக்கப்பட்டது. எனினும், இலங்கையும் எதிர்த்ததாக, திலங்க சுமதிபால தற்போது தெரிவித்துள்ளார்.

தற்போது 10 அணிகளுக்கு டெஸ்ட் அந்தஸ்துக் காணப்படும் நிலையில், இலங்கை அணி 7ஆவது இடத்தில் காணப்படுகிறது. இதன்படி, முதலாவது தடவையாக பிரிவு உருவாக்கப்படும்போது, இலங்கை அணி முதலாவது பிரிவில் காணப்படும். ஆனால், அடுத்த முறை பிரிவு இற்றைப்படுத்தும் போது, முதற்பிரிவில் 7ஆம் இடத்தில் காணப்படும் அணி, இரண்டாவது பிரிவுக்குச் செல்வதோடு, அந்தப் பிரிவில் முதலிடத்தில் காணப்படும் அணி, முதற்பிரிவுக்கு வரும். இது குறித்தே, இலங்கை அஞ்சியுள்ளதாகக் கருதப்படுகிறது.

"இரண்டு பிரிவு டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஆதரவு வழங்குவதில்லை என இலங்கை கிரிக்கெட் சபை முடிவுசெய்துள்ளது. இது, இலங்கை கிரிக்கெட் சபைக்கும் அதன் எதிர்காலத்துக்கும் தடங்கலானது என, நாம் எண்ணுகிறோம்" என திலங்க சுமதிபால தெரிவித்தார்.

முழு அங்கத்துவ நாடுகளாக இருந்தால், இரண்டு பிரிவுகள் இருக்க முடியாது என எண்ணுவதாகத் தெரிவித்த திலங்க, இந்திய அணி 8ஆவது இடத்துக்குச் சென்றால், என்ன நடக்குமெனவும் கேள்வியெழுப்பினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .