2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

பலுன் டி ஓர் இறுதிப்பட்டியலில் ரொனால்டோ, மெஸ்ஸி, நேமர்

Shanmugan Murugavel   / 2015 டிசெம்பர் 01 , மு.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் சிறந்த கால்பந்தாட்ட வீரருக்காக வழங்கப்படும் பலுன் டி ஓர் விருதுக்கான மூன்று பேர் கொண்ட இறுதிப் பட்டியலில் போர்த்துக்கல் தேசிய அணியினதும், ஸ்பெயின் கால்பந்தாட்டக் கழக ரியல் மட்ரிட்டினதும் வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, மற்றுமொரு ஸ்பானிய கால்பந்தாட்டக் கழகமான பார்சிலோனோ வீரர்களான ஆர்ஜென்டீனா தேசிய அணியினது லயனல் மெஸ்ஸி, பிரேசில் தேசிய அணியினது நேமர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்தத் தடவையுடன், தொடர்ச்சியாக எட்டாவது வருடமாக 30 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ, 28 வயதான மெஸ்ஸி ஆகியோர் பலுன் டி ஓர் விருதுக்கான இறுதிப்பட்டியலில் இடம்பெறுகின்றனர். இதேவேளை, 23 வயதான நேமர் முதற்தடவையாக மேற்படி விருதுக்கான இறுதிப் பட்டியலில் இடம்பெறுகின்றார்.  

ஸ்பானிய கால்பந்தாட்டக் கழகமான ரியல் மட்ரிட்டினதும், வேல்ஸினதும் முன் கள வீரரான கரித் பலே உள்ளிட்ட 23 பேர் கொண்ட பட்டியலில் இருந்தே இவர்கள் மூவரும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி விருதை தொடர்ச்சியாக நான்கு வருடங்களாக மெஸ்ஸியே கொண்டிருந்த நிலையில், அவரின் ஆதிக்கத்தை முறியடித்து, கடந்த இரு வருடங்களாக கிறிஸ்டியானோ ரொனால்டோவே விருதை வென்றிருந்தார்.

இந்த வருட உலகக் கிண்ண போட்டியில் இங்கிலாந்து அணியை மூன்றாமிடத்துக்கு அழைத்துச் சென்ற மார்க் சம்ஸன், வருடத்தின் உலகின் சிறந்த பீபாவின் பெண்கள் கால்பந்தாட்ட பயிற்சியாளர் விருதுக்கான போட்டியில் உள்ளார். ஆண்களுக்கான சிறந்த பயிற்சியாளருக்கான பிரிவில் பார்சிலோனா அணியின் பயிற்சியாளர் லூயிஸ் என்றிகேயும் பெய்ரான் முனிச் அணியின் பயிற்சியாளர் பெப் குவார்டிலோவும் சிலி தேசிய அணியின் பயிற்சியாளர் ஜோர்ஜ் சம்போலியும் உள்ளனர்.

இந்த விருதுகளின் வெற்றியாளர்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் 11ஆம் திகதி சூரிச்சில் இடம்பெறும் நிகழ்வொன்றில் வைத்து அறிவிக்கப்படவுள்ளனர்.

இதேவேளை ஆண்டின் சிறந்த அணிக்கான 50 பேர் கொண்ட பட்டியலிலும் கிறிஸ்டியானோ ரொனால்டோ, மெஸ்ஸி, நேமர் ஆகியோர் இடம்பெற்றுள்ளதோடு, ஆண்டின் சிறந்த கோலுக்கான புஷ்கஸ் விருதுக்கான பட்டியலில் மெஸ்ஸி இடம்பெற்றுள்ளார்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ, மெஸ்ஸி இருவரும் இவ்வருடம் 48 கோல்களை பெற்றுள்ளனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .