2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

அமைச்சைச் சந்திக்கிறது தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை

Shanmugan Murugavel   / 2016 மே 19 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்க விளையாட்டுத்துறை அமைச்சின் இனங்களுக்கான கொள்கையில், போதியளவு முன்னேற்றத்தை வெளிப்படுத்தாமை காரணமாக, சர்வதேசத் தொடர்களை நடாத்துவதற்கு அவ்வமைச்சால் தடை விதிக்கப்பட்டமை, ஆச்சரியம் தந்ததாகத் தெரிவித்துள்ள தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை, அது தொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 25ஆம் திகதி விதிக்கப்பட்ட இத்தடை காரணமாக, பூகோளத் தொடர்களை நடத்த முடியாத நிலை, தென்னாபிரிக்காவுக்கு ஏற்பட்டது. 2023ஆம் ஆண்டுவரை தென்னாபிரிக்காவில் சிரேஷ்ட வீரர்களுக்கான தொடர் எதுவும் ஏற்பாடு செய்யப்படவில்லை என்ற போதிலும், 2020ஆம் ஆண்டில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத்தை நடத்தவுள்ளது.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹரூன் லோகார்ட், அண்மை காலத்தில் தொடரெதனையும் நடத்தத் திட்டமிடாததன் காரணமாக, அது பற்றி அதிகமாகச் சிந்திக்கவில்லை எனத் தெரிவித்ததோடு, அமைச்சருடன் கலந்துரையாடி, என்ன விடயங்களில் முன்னேற்றம் தேவைப்படுகிறது என்பதை அறியவுள்ளதாகத் தெரிவித்தார்.

விளையாட்டுத்துறை அமைச்சால் விதிக்கப்பட் நிபந்தனைகளில், வெள்ளையரல்லாதோர், 60 சதவீதமாக அணியில் இடம்பிடிக்க வேண்டுமெனக் காணப்பட்டதாகவும், அதில் 55 சதவீதத்தையே தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை பூர்த்தி செய்திருந்ததாகவும் அறிவிக்கப்படுவதோடு, கறுப்பினத்தவர்களின் பிரதிநிதித்துவமும், முக்கியமான காரணம் என அறிவிக்கப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .