2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

இலங்கை எதிர் மே. தீவுகள்: 2ஆவது டெஸ்டில் இரண்டு அணிகளும் போராட்டம்

Shanmugan Murugavel   / 2021 மார்ச் 30 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்டில் இரண்டு அணிகளும் போராட்டத்தை வெளிப்படுத்தியுள்ளன.

அன்டிகுவாவில் நேற்றிரவு ஆரம்பமான இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கையணித்தலைவர் திமுத் கருணாரத்ன, தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என அறிவித்தார்.

அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள், ஆரம்பத்திலேயே சுரங்க லக்மாலிடம் ஜோன் கம்பெல், என்குறுமாஹ் பொன்னரை இழந்தது.

அதன் பின்னர் அணித்தலைவர் கிறேய்க் பிறத்வெய்டுடன் இணைந்து, லக்மாலின் பந்துவீச்சில் பிடியெடுப்பு தவறவிடப்பட்ட கைல் மேயர்ஸ் இனிங்ஸை நகர்த்தியபோதும், மதிய நேர இடைவேளையின் பின்னர் விஷ்வ பெர்ணான்டோவிடம் அவர் வீழ்ந்திருந்தார்.

பின்னர், தொடர்ந்து வந்த ஜெர்மைன் பிளக்வூட், ஜேஸன் ஹோல்டர், ஜோஷுவா டா சில்வா, அல்ஸாரி ஜோசப் ஆகியோரை மறுமுனையில் கொண்டு பிறத்வெய்ட் இனிங்ஸைக் கட்டியெழுப்பிய நிலையில், பிறத்வெய்ட் நிலைத்து நிற்க ஏனையோர் லக்மால், தனஞ்சய டி சில்வா, துஷ்மந்த சமீர, லசித் எம்புல்தெனியவிடம் வீழ்ந்திருந்தனர்.

இதையடுத்து, ரஹீம் கொர்ன்வோல், பிறத்வெய்ட்டின் பிரிக்கப்படாத இணைப்பாட்டத்துடன் முதல் நாள் முடிவில், 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 287 ஓட்டங்களை தமது முதலாவது இனிங்ஸில் மேற்கிந்தியத் தீவுகள் பெற்றுள்ளது.

தற்போது களத்தில், பிறத்வெய்ட் 99, கொர்ன்வோல் 43 ஓட்டங்களுடனுள்ளனர். முன்னதாக, மேயர்ஸ் 49, ஹோல்டர் 30, ஜோசப் 29 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்திருந்தனர். பந்துவீச்சில், லக்மால் 3 மற்றும் விஷ்வ பெர்ணான்டோ, லசித் எம்புல்தெனிய, துஷ்மந்த சமீர, தனஞ்சய டி சில்வா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .