2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

உலக றக்பி விருதுகளில் ஆதிக்கம் செலுத்திய நியூசிலாந்து

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 02 , பி.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

2015ஆம் ஆண்டுக்கான உலக றக்பி விருதுகளில், நடப்பு உலக சம்பியன்களான நியூசிலாந்து அணி, முழுமையான ஆதிக்கத்தை வெளிப்படுத்தியது. விருது நாளில் வழங்கப்பட்ட விருதுகளில் பெரும்பாலான விருதுகளை அவ்வணி கைப்பற்றிக் கொண்டது.

வருடத்தின் சிறந்த அணியாக நியூசிலாந்து அணி தெரிவானதோடு, சிறந்த றக்பி வீரராக, நியூசிலாந்தின் டான் கார்ட்டர் தெரிவானார்.

சிறந்த அணிக்கான விருதுதை நியூசிலாந்து வெல்லும் 6ஆவது தொடர்ச்சியான தடவை இதுவென்பதோடு, சிறந்த வீரருக்கான விருதை கார்ட்டர் வெல்லும் மூன்றாவது தடவை இதுவாகும். ஏற்கெனவே, 2005, 2012ஆம் ஆண்டுகளில் அவர் இவ்விருதுகளை வென்றிருந்தார். இதன்மூலம், இவ்விருதை மூன்று முறை வென்ற இரண்டாவது வீரராக அவர் மாறினார். நியூசிலாந்தின் தலைவர் றிச்சி மக்கோவும், இவ்விருதை மூன்று தடவைகள் வென்றிருந்தார்.

சிறந்த பயிற்றுநராக, அவுஸ்திரேலியப் பயிற்றுநர் மைக்கல் செய்கா தெரிவானார். நியூசிலாந்தின் பயிற்றுநர் ஸ்டீவ் ஹன்செனை முந்திக் கொண்டே மைக்கலுக்கு இவ்விருது கிடைத்திருந்தது. எனினும், ஸ்டீவ் ஹன்செனுக்கு இவ்விருது வழங்கப்படாமை குறித்து விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.

சிறந்த வீராங்கனைக்கான விருதை, நியூசிலாந்தின் கென்ட்ரா கொக்செட்ஜ் வென்றார். வருடத்தின் சிறந்த கண்டுபிடிப்பாக, நியூசிலாந்தின் நெஹெ மில்னெர் ஸ்கடர் அறிவிக்கப்பட்டார்.

ஏழு பேர் கொண்ட போட்டிகளின் சிறந்த வீரராக தென்னாபிரிக்காவின் வேர்ணர் கொக்கும் சிறந்த வீராங்கனையான போர்ஷியா வூட்மானும் தெரிவாகினர்.தவிர, சிறந்த மத்தியஸ்தராக, அயர்லாந்தைச் சேர்ந்த நைஜல் ஒவன்ஸ் தெரிவானார்.

இதேவேளை, தனது வெற்றிப் பதக்கத்தை, பாதுகாப்பு அதிகாரிகளால் தாக்கப்பட்ட சிறுவனுக்கு வழங்கிய நியூசிலாந்தின் சொனி பில் வில்லியம்ஸூக்கு, இந்நிகழ்வின்போது இரண்டாவது பதக்கம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .