Shanmugan Murugavel / 2016 நவம்பர் 17 , பி.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக டென்னிஸ் தரவரிசைப்படுத்தல்களில், முதல் எட்டு இடங்களுக்குள் உள்ள வீரர்களுக்கிடையில் குழு நிலையில் இடம்பெறும் தொழில்முறை டென்னிஸ் வீரர்களின் கூட்டமைப்பு உலகத் தொடர் இறுதிப் போட்டிகளில், நேற்றுப் புதன்கிழமை (16) இடம்பெற்ற குழு “ஏ” போட்டிகளில், உலகின் முதல்நிலை வீரரான பிரித்தானியாவின் அன்டி மரே, உலகின் மூன்றாம் நிலை வீரரான சுவிற்ஸர்லாந்தின் ஸ்டான் வவ்றிங்கா ஆகியோர் வெற்றி பெற்றனர்.
உலகின் ஐந்தாம் நிலை வீரரான ஜப்பானின் கீ நிஷிகோரியை எதிர்கொண்ட அன்டி மரே, 6-7 (9-11), 6-4, 6-4 என்ற செட் கணக்கில் போராடி வென்றிருந்தார். இப்போட்டியானது, மூன்று மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் இடம்பெற்றிருந்தது. குறித்த தொடரானது இலண்டனுக்கு மாற்றப்பட்ட பின்னர், அதிக நேரத்துக்கு நீடித்த போட்டி இதுவேயாகும்.
85 நிமிடங்கள் நீடித்த முதலாவது செட்டில், இரண்டு வீரர்களும் பல வாய்ப்புகளை உருவாக்கியும் தவறவிட்டுமிருந்த நிலையில், டைபிரேக்கர் வரை சென்ற குறித்த செட்டை நிஷிகோரி கைப்பற்றியிருந்தார். எனினும், அதன் பின்னர் சுதாகரித்துக் கொண்ட மரே, அடுத்த இரண்டு செட்களையும் கைப்பற்றி, தனது 21ஆவது தொடர்ச்சியான வெற்றியைப் பெற்றுக் கொண்டார்.
இதேவேளை, உலகின் ஏழாம் நிலை வீரரான குரோஷியாவின் மரின் சிலிச்சை எதிர்கொண்ட வவ்றிங்கா, 7-6, 7-6 என்று நேர் செட்களில் வென்றார்.
இப்போட்டிகளின் முடிவில், தொடரின் அரையிறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்புகளை மரே அதிகப்படுத்தியுள்ளார். வவ்றிங்காவுடனான தனது இறுதிக் குழுநிலைப் போட்டியில், நேர் செட்களில் மரே தோல்வியடைந்து, சிலிச்சை நிஷிகோரி வெற்றி பெற்றால் மட்டுமே, தொடரிலிருந்து மரே வெளியேற்றப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
6 hours ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
13 Apr 2026