2025 மே 19, திங்கட்கிழமை

ஐ.அ. அமீரகத்தை வீழ்த்திய இலங்கை

Shanmugan Murugavel   / 2022 ஒக்டோபர் 18 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், ஜீலொங்கில் இன்று நடைபெற்ற ஐ.அ. அமீரகத்துடனான முதலாவது சுற்று குழு ஏ போட்டியில் இலங்கை வென்றது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற ஐ.அ. அமீரகத்தின் அணித்தலைவர் சி.பி றிஸ்வான், தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என அறிவித்தார்.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, குசல் மென்டிஸ், பதும் நிஸ்ஸங்கவின் மூலம் வேகமான ஆரம்பத்தைப் பெற்றபோதும் மென்டிஸை இழந்தது. பின்னர் நிஸ்ஸங்க, தனஞ்சய டி சில்வா ஆகியோர் வேகமாக ஓட்டங்களைப் பெற்ற நிலையில், டி சில்வா 33 (21) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இதைத் தொடர்ந்து நிஸ்ஸங்க தொடர்ந்தும் ஓட்டங்களைப் பெற்றபோதும், கார்த்திக் மெய்யப்பனின் 15ஆவது ஓவரின் இறுதி மூன்று பந்துகளில் ஹட்-ட்ரிக் முறையில் பானுக ராஜபக்‌ஷ, சரித் அஸலங்க, அணித்தலைவர் தசுன் ஷானக வரிசையாக வீழ்ந்தனர்.

அடுத்து வந்த வனிடு ஹஸரங்க, சாமிக கருணாரத்னவும் ஒற்றை இலக்க ஓட்டங்களோடு வீழ்ந்த நிலையில், இறுதியாக 74 (60) ஓட்டங்களோடு நிஸ்ஸங்கவும் விழ 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 152 ஓட்டங்களை இலங்கை பெற்றது.

பதிலுக்கு 153 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ஐ.அ. அமீரகம் ஆரம்பத்திலிருந்தே துஷ்மந்த சமீர (3), பிரமோத் மதுஷன், ஷானக, ஹஸரங்க (3), மகேஷ் தீக்‌ஷனவிடம் (2) வரிசையாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 17.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 73 ஓட்டங்களையே பெற்று 79 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இப்போட்டியின் நாயகனாக நிஸ்ஸங்க தெரிவானார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X