2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

சௌதம்டன், ஸ்வான்சீ அணிகள் வெற்றி

Gopikrishna Kanagalingam   / 2015 ஓகஸ்ட் 31 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டத் தொடரின் போட்டிகளில், சௌதம்டன், ஸ்வான்சீ சிற்றி அணிகள் வெற்றிபெற்றுள்ளன.

சௌதம்டன் அணிக்கும் நோர்விச் சிற்றி அணிக்குமிடையிலான போட்டியில், சௌதம்டன் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

போட்டியின் 31ஆவது நிமிடத்திலேயே நோர்விச் அணியின் ஸ்டீவன் விட்டக்கர் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட, 10 பேர் கொண்ட அணியாக அவ்வணி மட்டுப்படுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, முதலாவது பாதியின் இறுதி நிமிடத்தில் கிரேஷியானோ பெல்லே கோலொன்றைப் பெற்று, முதற்பாதியில் 1-0 என்ற முன்னிலையை வழங்கினார்.

இரண்டாவது பாதியில் டூஸன் தாடிக் இரண்டு கோல்களைப் பெற்றார். 65ஆவது நிமிடத்திலும் 68ஆவது நிமிடத்திலுமே அவர் கோல்களைப் பெற்றுக் கொடுத்து, சௌதம்டன் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெறுவதை உறுதிசெய்தார்.

ஸ்வான்சீ சிற்றி அணிக்கும் மன்செஸ்டர் யுனைட்டட் அணிக்குமிடையிலான போட்டியில், ஸ்வான்சீ சிற்றி அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

முதலாவது பாதியில் கோலெதுவும் பெற்றுக்கொள்ளப்படாத நிலையில், போட்டியின் முதலாவது கோலை யுனைட்டட் அணியின் ஜுவான் மாட்டா பெற்றுக் கொடுத்தார். எனினும், 61ஆவது நிமிடத்தில் அன்ட்ரே அயேவும் 66ஆவது நிமிடத்தில் பஃபேதிம்பி கோமிஸும் கோல்களைப் பெற்று, ஸ்வான்சீ சிற்றி அணிக்கு 2-1 என்ற கோல் கணக்கிலான வெற்றியை வழங்கினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .