2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

சம்பியனானார் நடால்

Shanmugan Murugavel   / 2017 ஜனவரி 01 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அரபு அமீரகத்தில் இடம்பெறும் முபடாலா உலக டென்னிஸ் சம்பியன்ஷிப் தொடரின் சம்பியனாக, முன்னாள் முதல்நிலை வீரரான ஸ்பெய்னின் ரபேல் நடால் தெரிவாகியுள்ளார்.

இறுதிப் போட்டியில், 11ஆம் நிலை வீரரான பெல்ஜியத்தின் டேவிட் கொபினை எதிர்கொண்ட 9ஆம் நிலை வீரரான ரபேல் நடால், 6-4, 7-6 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றார். கடந்தாண்டு முழுவதும் உபாதைகளால் அவதிப்பட்டு வந்த நடால், அந்த ஆண்டை, வெற்றியுடன் நிறைவுசெய்துள்ளார்.

முன்னதாக, உலகின் முதல்நிலை வீரரான பெரிய பிரித்தானியாவின் அன்டி மரே, மூன்றாம் நிலை வீரரான கனடாவின் மிலோஸ் றாவோனிஸை 6-3, 7-6 என்ற செட் கணக்கில் தோற்கடித்து, மூன்றாமிடத்தைப் பெற்றார். எலிஸபெத் மகாராணியின் புத்தாண்டுக்கான கௌரவங்களுக்கான பட்டியலில், சேர் பட்டத்தைப் பெறுவதாக அறிவிக்கப்பட்ட 29 வயதான அன்டி மரே, அந்தப் பட்டத்தைப் பெற்றுக் கொண்ட பின்னர் பெற்ற முதலாவது வெற்றியாக இது அமைந்தது.

இவ்வாண்டில் முதலிடத்தைக் கைப்பற்றியமை மாத்திரமன்றி, விம்பிள்டன், அவுஸ்திரேலியப் பகிரங்க டென்னிஸ் தொடர், ஒலிம்பிக், ஏ.டி.பி உலகத் தொடர் இறுதிப் போட்டிகள் ஆகியவற்றிலும் சம்பியன் பட்டம் வென்ற அன்டி மரேயின் அதிசிறந்த ஆண்டை, சிறப்பாக முடித்துக் கொள்வது போல, அவருக்கான கௌரவம் அமைந்திருந்தது.

அன்டி மரேயோடு சேர்ந்து, நெடுந்தூர ஓட்ட வீரரும் ஒலிம்பிக் சம்பியனுமான மொஹமட் ஃபாரா, அங்கவீனமடைந்தோருக்கான குதிரைச் சவாரியில் சம்பியனான லீ பியர்ஸன் ஆகியோரும் சேர் பட்டங்களைப் பெற்றுக் கொண்டனர். இதில் மரே, நவீனகால பிரித்தானிய வரலாற்றில், குறைந்த வயதில் சேர் பட்டம் வென்றவர் என்ற சானையைப் படைத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .